Main Menu

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடற்படை வீரர் உயிரிழக்கவில்லை

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடற்படை வீரர் உயிரிழக்கவில்லை என்றும் அவரின் உயிரிழப்பிற்கு எலிக்காச்சல் காரணம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெலிசர கடற்படை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த கடற்படை வீரர் நேற்று உயிரிழந்திருந்தார் என்றும் அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள இலங்கை கடற்படை, எலி காய்ச்சல் காரணமாக கொழும்பு கடற்படை பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கடற்படை அதிகாரி ஒருவர் நேற்று உயிரிழந்தார் என தெரிவித்துள்ளது.

இவர் கடற்படை தலைமையகத்தில் பணியாற்றிய கலென்பிந்துநுவெவ பகுதியைச் சேர்ந்த 35 வயதான லெப்டினன்ட் கமாண்டர் தொடம்வல கெதர சுனில் பண்டார தொடம்வல என்றும் அவர் 2020 ஏப்ரல் 18 ஆம் திகதி நோய் நிலை காரணமாக கொழும்பு கடற்படை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் சிகிச்சை பெற்ற காலத்தில் மருத்துவர்கள் மேற்கொண்ட விசாரணையின் போது அவர் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது என்றும் மேலும் வெலிசர கடற்படைத் தளத்தில் கோவிட் 19 வைரஸ் பரவியதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த கடற்படை அதிகாரி கோவிட் 19 வைரஸால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் இந்த மரணம் ஏற்படவில்லை என்றாலும், வெலிசர கடற்படை முகாம் வளாகத்தில் நிலவும் சூழ்நிலை காரணமாக கோவிட் 19 இறப்புகளின் இறுதிச் சடங்குகளைத் தொடர்ந்து குறித்த கடற்படை அதிகாரியின் இறுதிச் சடங்குகளை நடத்துமாறு ராகம நீதித்துறை மருத்துவ அதிகாரி பரிந்துரைத்தார் என்றும் அதன் படி இறுதிச் சடங்குகள் கடற்படையின் மரியாதையுடன் நடைபெறவுள்ளது என்றும் கடற்படை அறிவித்துள்ளது.

பகிரவும்...