Main Menu

கொரோனாவை கட்டுப்படுத்த 19 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது தமிழ்நாடு அரசு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் நெறிமுறைகளை வகுப்பதற்காக 19 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நிபுணர் குழுவில் இடம்பெறும் மருத்துவர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் குழுவினர் மாநிலத்தில் தொற்றுப் பரவல் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவார்கள் என்றும், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைகளை வழங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்து, அவற்றை தமிழகத்தில் செயற்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வார்கள் என்றும் அவர்களுக்கு அனைத்து அதிகாரிகளும் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துவருவதைத் தொடர்ந்து தமிழக அரசால் பல்வேறு தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றநிலையில் தற்போது நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...