Main Menu

கொரோனாவின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை- பாலித ரங்கே பண்டார

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலின் முதலாவது அலையைக் கட்டுப்படுத்திய அரசாங்கம் இரண்டாம் அலையை எதிர்கொள்வதற்கான தயார்ப்படுத்தல்கள் எதனையும் செய்யவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார குற்றஞ்சாட்டியுள்ளார்.

நுவரெலியாவில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், அதன் விளைவையே தற்போது மக்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள் என குறிப்பிட்டார்.

குறித்த ஊடக சந்திப்பில் பாலித ரங்கே பண்டார மேலும் கூறியுள்ளதாவது, “உலகலாவிய ரீதியில் கொவிட் – 19 கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலையொன்று ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், அதன் விளைவாக இலங்கையும் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியேற்படலாம் என்றும் கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்தார்.

அது மாத்திமன்றி முகக்கவசங்களையும் செயற்கை சுவாசக்கருவிகளையும் எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது குறித்தும் ஐ.டி.எச்.வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக மேலதிகமாக ஒரு பிரிவை ஸ்தாபிப்பது குறித்தும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

எனினும் அவர் கூறிய விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியதா என்பது தற்போது மிகமுக்கிய கேள்வியாக மாறியிருக்கிறது.

ஏனென்றால் எமது நாடு கொரோனா வைரஸ் பரவலின் முதலாவது அலைக்கு முகங்கொடுத்ததோடு அதனைக் கட்டுப்படுத்துவதற்கு சுகாதார மற்றும் பாதுகாப்புப்பிரிவுகள் ஒன்றிணைந்து செயலாற்றின.

அதில் அடைந்துகொண்ட வெற்றியைப் பயன்படுத்தி, நாட்டுமக்கள் மத்தியிலும் சர்வதேசத்தின் மத்தியிலும் அரசாங்கம் தமது பெருமையைப் பறைசாற்ற முயற்சித்ததே தவிர, வைரஸ் பரவலின் இரண்டாம் அலை ஏற்படும் பட்சத்தில் அதனைக் கையாள்வதற்கான தயார்ப்படுத்தலைச் செய்யவில்லை என்பதை தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைவரங்களின் ஊடாகப் புரிந்துகொள்ள முடிகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...