Main Menu

கொடநாட்டுக்கு நானே உரிமையாளர் – சசிகலா

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு தானே உரிமையாளர் என சசிகலா வருமான வரித்துறைக்கு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டபோது, சசிகலா தன்னிடம் இருந்த உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி ரூபாய் 1,674 கோடிக்கு சொத்து வாங்கியதாகவும் ரூ.237 கோடி பணத்தை கடனாக வழங்கியதாகவும் வருமான வரித்துறை தெரிவித்த தகவல் ஏற்கனவே வெளியானது.

இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு சொந்தம் என்று கூறப்பட்ட கொடநாடு உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தனக்கு சொந்தமானது என்று சசிகலா கூறி இருப்பதாக வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்யப்பட்ட விளக்க அறிக்கையில் தகவல் இருப்பதாக தெரியவந்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பெங்களூர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே 5 நாட்கள் சசிகலா பிணைியில் வெளியில் வந்தார். அவர் வந்து சென்ற பிறகு ஒரு மாதம் கழித்து நவம்பர் மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன், சசிகலாவின் உறவினர் வீடுகள், நிறுவனங்கள் ஆகியவற்றில் திடீர் சோதனை நடத்தினார்கள்.

அப்போது ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினர். அதில்தான் அவர் ரூ.1,900 கோடி அளவுக்கு பணமதிப்பிழப்பு நோட்டுகளை பயன்படுத்தி சொத்து வாங்கியது மற்றும் கடன் கொடுத்தது தெரியவந்தது.

எனவே, இது சம்பந்தமாக விளக்கம் கேட்டு சசிகலாவுக்கு வருமான வரித்துறையினர் அறிவித்தல் அனுப்பினார்கள்.

அதில் அக்டோபர் 22ஆம் திகதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இவ்வளவு பணம் எப்படி வந்தது? அதற்கான கணக்குகளை வருமான வரித்துறையிடம் ஏன் தாக்கல் செய்யவில்லை? இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் 22ஆம் திகதி சசிகலாவின் ஆடிட்டர் வருமான வரித்துறைக்கு பதில் கடிதம் ஒன்று அனுப்பினார். அதில், வருமான வரித்துறையின் அறிவித்தல் 19ஆம் திகதிதான் எங்களுக்கு கிடைத்தது. 22ஆம் திகதிக்கு 3 நாட்களே அவகாசம் இருக்கும் நிலையில், எங்களால் இதற்கு பதில் அளிக்க முடியாது. மேலும் சசிகலா சிறையில் இருப்பதால் உரிய தகவல்களை உடனடியாக திரட்டி முடியாது. எனவே, பதில் அளிப்பதற்கு 30 நாட்கள் அவகாசம் வேண்டுமென கேட்டு இருந்தார்.

ஆனால்,இ வருமான வரித்துறை 15 நாட்கள் அவகாசம் வழங்கியது. ஆனாலும் அந்த நாட்களுக்குள் பதில் தாக்கல் செய்யப்படவில்லை. இறுதியாக டிசம்பர் 11ஆம் திகதி சசிகலா சார்பில் ஆடிட்டர் தனது பதில் அறிக்கையை தாக்கல் செய்தார்.

அதில் ரூ.1,900 கோடி பண மதிப்பிழப்பு நோட்டு பற்றியும் அதை பயன்படுத்தி வாங்கிய சொத்துக்கள் பற்றியும் எந்த தகவலும் தெரியாது என்று கூறப்பட்டு இருந்தது.

மேலும் சசிகலாவுக்கு என்னென்ன சொத்துக்கள் இருக்கின்றன? அதில் எவ்வாறெல்லாம் வருமானம் வருகிறது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

மேலும் ஜெயலலிதாவுக்கு சொந்தமானதாக கூறப்படும் கொடநாடு எஸ்டேட் மற்றும் 4 சொத்துக்களில் 2016 ஏப்ரல் 1ல் இருந்து ஜெயலலிதா மரணம் அடைந்த 2016 டிசம்பர் 5ஆம் திகதி  வரை பங்குதாரராக இருந்ததாகவும் ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு பங்குதாரர் நிறுவனம் கலைக்கப்பட்டு அதன் உரிமையாளராக சசிகலா இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தனக்கு சொந்தமானது என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பகிரவும்...