Main Menu

குழந்தை மனநிலையில் உள்ளவர்கள் யோகா பயிற்சி செய்யுங்கள் – ராகுல் காந்திக்கு பா.ஜனதா அறிவுரை

குழந்தை மனநிலை படைத்தவர்கள், நிலையற்ற மனதை கட்டுப்படுத்த யோகா பயிற்சி செய்ய வேண்டும் என ராகுல் காந்திக்கு பா.ஜனதா அறிவுரை வழங்கியுள்ளது.

பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றியபோது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செல்போனை பயன்படுத்தி கொண்டிருந்ததாக கூறி, அதை பாரதிய ஜனதா சர்ச்சையாக்கி உள்ளது.

இது அற்பத்தனமானது என காங்கிரஸ் பதிலடி கொடுத்தது.

இந்த பிரச்சினையை பாரதிய ஜனதா பொதுச்செயலாளர் ராம் மாதவ் நேற்று மீண்டும் எழுப்பினார்.

திருவனந்தபுரத்தில் யோகா தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் ராகுல்காந்தியை கிண்டல் செய்வது போல அறிவுரை கூறினார்.

அப்போது அவர், “வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்தும்போது குழந்தைகள் அதில் கவனம் செலுத்துவது கஷ்டம். பள்ளிக்கூடங்களில் மட்டுமல்லாது பாராளுமன்றத்திலும் குழந்தைகள் உள்ளனர். அவர்கள் ஜனாதிபதி உரையாற்றும்போதுகூட கவனம் செலுத்துவது இல்லை. செல்போனை பயன்படுத்திக்கொண்டிருந்தார்கள். குழந்தை மனநிலை படைத்தவர்கள், நிலையற்ற மனதை கட்டுப்படுத்த யோகா பயிற்சி செய்ய வேண்டும்” என கூறினார்.

பகிரவும்...