Main Menu

கருணாநிதி சிலை தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

தனக்கு சொந்தமான நிலத்தில், தனது கட்சியின் மறைந்த தலைவர் கருணாநிதி சிலை அமைக்க அனுமதிக்கக் கோரி, தி.மு.க.பிரமுகர் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தி.மு.க.பொதுக்குழு உறுப்பினரும், சட்டத்தரணியுமான எம்.நாராயணன் இவ்விடயம் தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளார்.

குறித்த வழக்கு மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது, “மாதவரத்தை அடுத்த கொசப்பூரில் எனக்கு சொந்தமான நிலத்தில், தி.மு.கவின் மறைந்த தலைவர் கருணாநிதியின் வெங்கலச் சிலையை அமைத்துள்ளேன். அதனை தற்போதைய தலைவர் ஸ்டாலின் திறந்து வைக்க திட்டமிட்டிருந்தேன்.

தி.மு.க.தலைவராகவும், முதல்வராகவும் கருணாநிதி சமூகத்தில் நிகழ்த்திய சாதனைகளையும், வளர்ச்சிகளையும் கொண்டாடும் வகையில் தி.மு.க.வினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தும் நிலையில், எங்களுடைய பாசத்தலைவனுக்கு தன் சொந்த இடத்தில் அமைத்துள்ள வெண்கலச்சிலையை அமைத்துள்ளேன்.

சிலை திறப்பு விழா நடத்த அனுமதி கோரி ஒகஸ்ட் 27 மற்றும் செப்டம்பர் 7ஆம் திகதிகளில் மனு அனுப்பியும்  பொலிஸ் மற்றும் வட்டாட்சியர் ஆகியோருக்கு மனு அனுப்பியும் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.

எனவே, என் மனுவை பரிசீலித்து திறப்பு விழாவிற்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

குறித்த மனு, நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது நீதிபதி, ஒருவர் தனக்கு சொந்தமான நிலத்தில் சிலைகளை வைக்கலாம் என்பது தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டு, வழக்கை நவம்பர் 2ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

பகிரவும்...