Main Menu

கமலின் பிரசாரத்தை தடைசெய்ய வேண்டும் – தமிழிசை வலியுறுத்தல்

இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிக்கு சென்று இந்து தீவிரவாதம் என்று பேசும் கமலின் பிரசாரம் தடை செய்யப்பட வேண்டும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறி உள்ளார்.

தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மகாத்மா காந்தியின் படுகொலை நாடே பதறிய ஒன்று. அதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. அதனால் அந்த மாபாதக செயலை செய்த கோட்சே தூக்கிலிடப்பட்டான். ஆனால் இன்று இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியில் ‘இந்து தீவிரவாதம்’ என்ற வார்த்தையை பயன்படுத்தியது மட்டுமல்லாமல் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம் இந்து தீவிரவாதம் என்று நடிகர் கமல் பேசியிருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

புதிய அரசியலை முன்னெடுக்கிறோம் என்று சொல்லும் கமல் பழைய, வி‌ஷமத்தனமான, வி‌ஷம் பொருந்திய பிரித்தாளும் ஓட்டு அரசியலில் தானும் கீழ்த்தரமாகத்தான் நடந்து கொள்வேன் என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

வாழ்க்கையில் ஒழுக்கத்தை கடைபிடித்தவர் மகாத்மாகாந்தி. வாழ்வில் எந்த ஒழுக்கத்தையும் கடைபிடிக்காத கமல்தான் காந்தியின் கொள்ளுப் பேரன் என்று சொல்ல எந்த தகுதியும் இல்லாதவர். இப்படி எந்த தகுதியும் இல்லாமல் அரசியலில் நுழைந்து ஏதாவது ஒரு வகையில் மக்களை கவர வேண்டும் என்று பேசுவது கண்டிக்கத்தக்கது. அதுவும் மதக்கலவரத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தும் அளவிற்கு பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

பக்கத்து நாட்டில் அதிபயங்கரமான குண்டுவெடிப்பு நடந்து… அதில் ஈடுபட்டவர்கள் இஸ்லாமியர்கள் என்று தெரிந்தும் கண்டிக்காதவர்கள், கருத்து கூட சொல்லாதவர்கள், இஸ்லாமிய தீவிரவாதம் என்று சொல்லும் துணிச்சல் அற்றவர்கள், தீவிரவாதத்துக்கு மதம் கிடையாது என்று சப்பை கட்டு கட்டியவர்கள், இன்று செத்து மடிந்த ஒரு பிரச்சினையை அதுவும் ‘இந்து’ என்ற அடைமொழியோடு சொல்லி இருப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

பிரசாரக் கூட்டங்களில் பதற்றமான கருத்துக்கள் கூறப்படுகிறதா என்பதை கண்டறிய தேர்தல் ஆணையம் வீடியோ பதிவெடுக்கிறார்கள். இது எதற்கு? இத்தகைய கருத்துக்களை கூறினால் நடவடிக்கை எடுப்பதற்கு. இத்தகைய கருத்துக்கள் மீது தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வட இந்தியாவில் சிலரின் சர்ச்சைக்குரிய கருத்துக்களால் அவர்கள் பிரசாரம் செய்வதே தடை செய்யப்பட்டிருக்கிறது.

இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிக்கு சென்று இந்து தீவிரவாதம் என்று பேசும் கமலின் கருத்து வி‌ஷமத்தனமான உள்நோக்கம் கொண்டது. ஆக இத்தகைய நோக்குடையவர்களின் பிரசாரம் தடை செய்யப்பட வேண்டும். பதற்றத்தை ஏற்படுத்தும் சூழலை ஏற்படுத்த முயற்சிப்பதால், காவல்துறை இவர் மீது சட்டநீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தன் ஒரு படத்திற்கு தடை ஏற்பட்டதால் நாட்டை விட்டே ஓடுவேன் என்று தன் விஸ்வரூபத்தை காட்டிய கமல், இன்று நாட்டைப் பற்றியும், காந்தியைப் பற்றியும், நாட்டுப்பற்றையும் பற்றி பேசுவது அப்பட்டமான அரசியல் நடிப்பு. திரை நடிப்பு முடிந்து வாய்ப்பு கிடைக்காத கமல் அரசியல் வாய்ப்புக்காக கண்டபடி பேசுவது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

கமல்ஹாசனின் பேச்சுக்கு இந்தி நடிகர் விவேக் ஓபராயும் கண்டனம் தெரிவித்துள்ளார். இவர் பிரதமர் மோடியின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘‘பி.எம் நரேந்திர மோடி’’ படத்தில் மோடியாக நடித்தவர். அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

நாட்டை துண்டாட வேண்டாம். கலைக்கு மதம் இல்லாதது போல தீவிரவாதத்துக்கும் மதம் கிடையாது. ஓட்டுக்காக முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதிகளில் கோட்சேவை இந்து தீவிரவாதி என்கிறீர்களா கமல்?

இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் சர்ச்சை பேச்சுக்கு பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...