கதிர்காமப் பாத யாத்திரையை தேசிய புனித யாத்திரையாக பிரகடனப்படுத்துவேன்: மனோ
பாரம்பரியமாக வடக்கு, கிழக்கு, மலையகப் பகுதிகளிலிருந்து வருடாந்தம் கதிர்காமத்திற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் பாதயாத்திரை அரச அங்கீகாரத்துடன் தேசிய புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தப்படும் என்று தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக முன்னேற்ற இந்து சமய அலுவல்கள் அமைச்சரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
நாட்டில் தமிழர்கள் தங்களின் இருப்பை நிலைநிறுத்துவதோடு சகோதர இன, மத மக்களை அரவணைக்க வேண்டும். அப்போதுதான் சமூக நல்லிணக்கத்தினை பாதுகாத்துக் கொண்டு தமிழ் மக்களின் இருப்பை உறுதிப்படுத்தமுடியும் என்றும் அவர் கூறினார்.
அம்பாறை உகந்தை மலை ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கான பிரதான வீதி நுழைவாயில் கோபுரத்தினை நேற்று வியாழக்கிழமை காலை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அமைச்சர் அங்கு தொடர்ந்து உரையாற்றும் போது தெரிவித்ததாவது,
தமிழர்கள் தங்களில் இருப்பை நிலை நிறுத்திக் கொள்வதற்காக பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நாம் நமது இருப்பை பாதுகாத்துக் கொள்வதற்கு போராடுகின்ற அதே நேரம் இந்த நாட்டில் உள்ள சகோதர இன, மத மக்களையும் அனுசரித்து செல்ல வேண்டும்.
இன்று நாட்டில் நிதானமாகவும் முதிர்ச்சியுடனும் தமிழர்களின் இருப்பை நிலை நிறுத்தி வருகின்றோம். ஒரு புறத்தில் தமிழர்களின் இருப்பை நிலை நிறுத்துவதோடு சகோதர இனத்தவர்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றுக் கொள்ள வேண்டும். இது சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்.
ஒன்று முந்தி மற்றொன்று பிந்தியும் இடம்பெறுமானால் சகோதர இன, மத மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்வதோடு நாம் காணாமல் போய்விடுவோம். எனவே தமிழர்களின் இருப்பையும் சகோதர இன மக்களின் அரவணைப்பையும் சமாந்தரமாக முன்னெடுக்க வேண்டும்.
இந்நிகழ்வில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கா ஆகியோரும் உரையாற்றினர்.
இதனைத் தொடர்ந்து கிழக்கிலங்கை வரலாற்று சிறப்புமிகு உகந்தை ஸ்ரீமுருகன் ஆலயத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் அழைப்பின் பேரில் விஜயம் செய்த அமைச்சர் மனோ கணேசன், ஆலயத்திற்கான பிரதான வீதி நுழைவாயிலை திறந்து வைத்ததுடன் கதிர்காம பாத யாத்திரிகர்களுக்கான குமண காட்டுவழிப் பாதையையும் சம்பிரதாயபூர்வமாக அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் மற்றும் மதகுருமார்கள் ஆகியோர் திறந்து வைத்தனர்.