Main Menu

கதவில் புடவை சிக்கியதால் மெட்ரோ ரெயிலில் இழுத்து செல்லப்பட்டு பெண் படுகாயம்

கதவில் புடவை சிக்கியதால் மெட்ரோ ரெயிலில் இழுத்து செல்லப்பட்டு பெண் தலையில் படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார்.

டெல்லியில் இந்தர்லோக் பகுதியில் அமைந்துள்ள சாஸ்திரி நகரை சேர்ந்தவர், ஜெகதீஷ் பிரசாத். இவரது மனைவி கீதா.

கீதாவும், அவரது மகளும் நவாடா என்ற இடத்துக்கு போய் விட்டு, மெட்ரோ ரெயிலில் டெல்லி மோதி மெட்ரோ ரெயில் நிலையத்தில் நேற்று வந்து இறங்க முற்பட்டனர்.

முதலில் ரெயிலில் இருந்து மகள் இறங்கினார். அவரைத் தொடர்ந்து, கீதா இறங்கிக்கொண்டிருந்தபோதே, சடாரென ரெயில் கதவு மூடிக்கொண்டது. இதில் அவரது புடவை சிக்கிக்கொண்டது. இதன் காரணமாக அவர் ரெயிலில் இழுத்துச்செல்லப்பட்டு, தலையில் படுகாயம் அடைந்தார்.

உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டது. அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதை டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் அதிகாரி ஒருவர் உறுதி செய்தார்.

இந்த சம்பவம் பற்றி கீதாவின் கணவர் ஜெகதீஷ் பிரசாத் கூறுகையில், “ என் மனைவியின் புடவை, ரெயில் கதவில் சிக்கியதால், அவர் ரெயிலில் இழுத்துச்செல்லப்பட்டு தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து பற்றி என்னை என் மகள் செல்போனில் அழைத்து தகவல் கூறினார். பயணிகளில் ஒருவர் நெருக்கடி கால பொத்தானை அழுத்தி ரெயிலை நிறுத்தி இருக்கிறார்” என குறிப்பிட்டார்.

இந்த பரிதாப சம்பவத்தால் மோதி மெட்ரோ ரெயில் நிலையத்தில் நேற்று பரபரப்பு நிலவியது.

பகிரவும்...