Main Menu

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணி குறித்து நீதியமைச்சர் ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பு?

நீதியமைச்சர் அலி சப்ரி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணி தொடர்பாக தனது கவலைகள் குறித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்காட்லாந்தில் இருந்து நாடு திரும்பிய ஜனாதிபதியை சப்ரி நேற்று சந்திப்பார் என தகவல் கிடைத்ததாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

எவ்வாறிருப்பினும் அவர்கள் எப்போது சந்திப்பார்கள் என்ற சரியான திகதி உடனடியாகத் தெரியவில்லை எனவும் கூறப்படுகிறது.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பான வரைவை தயாரித்து அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்துக்குள் இறுதி அறிக்கையை சமர்பிப்பதற்காக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான செயலணியை நியமித்தமை குறித்து அலி சப்ரி ஏமாற்றமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

செயலணியை நியமிப்பதற்கு முன்னர் அமைச்சர் அலி சப்ரியிடம் கலந்தாலோசிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் நீதியமைச்சரிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விளக்கமளித்ததாக ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க இந்த வாரம் தெரிவித்தார்.

இந்த செயலணியை நியமிக்கும் நடவடிக்கையை நீதியமைச்சர் ஆரம்பத்தில் அறிந்திருக்க வாய்ப்பில்லை எனவும் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி பின்னர் நீதியமைச்சரை சந்தித்து செயலணியின் நியமனம் தொடர்பாக விளக்கமளித்ததாக அவர் கூறியுள்ளார்.

எவ்வாறிருப்பினும் குறித்த செயலணி நியமனத்தில் நீதியமைச்சர் திருப்தியடையவில்லை என்றும் ஜனாதிபதியை சந்தித்து அவர் தனது கவலைகள் குறித்து கலந்துரையாடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...