Main Menu

ஐ.நா. உறுப்பு நாடுகளுக்கு தெளிவான செய்தியை வழங்க முடிவு- கஜேந்திரகுமார்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் மற்றும் அதன் உறுப்பு நாடுகளுக்கு தெளிவான செய்தியொன்றை வழங்குவதற்கு மூன்று கட்சிகளுக்கிடையில் இணக்கப்பாடு வந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா விடயங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக இலங்கை தமிழ் அரசு கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான ஆலோசனை குழு இன்று இடம்பெற்றது.

வவுனியா, குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியிலேயே இந்தச் சந்திப்பு நடைபெற்ற நிலையில், அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “பொறுப்புக்கூறல் தொடர்பாக மனித உரிமைகள் பேரவையில் எத்தனையோ தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும் அந்தவிடயம் ஒரு பூச்சியத்தில் இருக்கும் நிலையில் எதிர்காலத்தில் எவ்வாறான அணுகுமுறைகளை எடுப்பது என்பது தொடர்பாக இன்று பேசியிருந்தோம்.

2012 இல் இருந்து தமிழ் தேசிய மக்கள் முண்ணனி அந்தவிடயத்தில் ஒரு தெளிவான நிலைப்பாட்டை வலியுறுத்தி வந்துள்ளது.

மனித உரிமைகள் விடயத்தில் பொறுப்புக்கூறல் தொடர்பாக கட்சிகள் மட்டத்தில் இருக்கக்கூடிய பலவீனத்தை முழுமையாக விளங்கிக்கொள்ளக்கூடிய அளவிற்கு ஒரு இணக்கப்பாடு வந்திருந்தது.

மேலதிகமாக, வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ் கட்சிகள், சிவில் அமைப்புகள் ஒரு புள்ளியில் சந்திக்ககூடிய வகையில் உறுப்புநாடுகள் மற்றும் மனித உரிமைப் பேரவை, அதன் ஆணையாளர் ஆகியோருக்கு தெளிவான ஒரு செய்தியை வழங்கவேண்டியமை தொடர்பாகவும் ஒரு இணக்கப்பாடு வந்துள்ளது.

இதுதொடர்பாக மேலதிக செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு நானும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சிவில் சமூகப் பிரதிநிதிகளின் அமைப்பு, விக்னேஸ்வரனுடைய அமைப்பு இணைந்து ஒரே புள்ளி என்ற விடயத்தை எழுத்துமூலம் ஆவணப்படுத்துவதற்கு இணங்கியுள்ளோம். மிகவிரைவில் அது முன்னெடுக்கப்படும்.

இதனை ஒரு ஆரம்பமாக வைத்து அடுத்தக்கட்ட சந்திப்புகளை மேற்கொள்வதற்கு நாம் இணங்கியிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

பகிரவும்...