Main Menu

ஏழாவது சுற்றுப் பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக இருந்தது : இந்தியா – சீனா கூட்டறிக்கை வெளியீடு!

இரு நாட்டு இராணுவ அதிகாரிகளுக்கு இடையே நடந்த ஏழாவது சுற்றுப் பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்ததாக இந்தியா – சீனா நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய – சீன எல்லையில் லடாக் பகுதியில் இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. பிரச்சினைக்கு தீர்வு காண இரு நாட்டு இராணுவ அதிகாரிகளிடையே ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே நடந்து முடிந்தன. எனினும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் ஒருமித்த கருத்துக்கள் எட்டப்படவில்லை.

இந்த நிலையில், இந்திய சீன இராணுவ கொமாண்டர்கள் இடையே நடந்த ஏழாவது சுற்று பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்தியா மற்றும் சீனா ஆகியன இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

குறித்த அறிக்கையில், எல்லையில் இருந்து படைகளை விலக்கிக்கொள்வது குறித்து நடந்த ஏழாவது சுற்று பேச்சுவார்த்தை நம்பிக்கை அளிப்பதாகவும், ஆக்கப்பூர்வமாகவும் பரஸ்பரம் புரிந்துகொள்ளும் வகையிலும் அமைந்ததாக தெரிவித்துள்ளன.

மேலும் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடு பிரச்சினையாக மாறக்கூடாது என்ற இரு நாட்டு தலைவர்களின் விருப்பத்தை முழுமையாகவும், விரைவாகவும் செயற்படுத்த குறித்த பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளன.

அதேநேரம் எல்லையில் இருந்து படைகளை மிக விரைவில் திரும்பப் பெறுவது குறித்து பரஸ்பரம் இராணுவம் மற்றும் தூதரக உறவு மூலம் பேச்சு நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...