Main Menu

எஸ்.பி.பி 3ம் ஆண்டு நினைவு தினம் இன்று

மறைந்த பாடகரும் , இசையமைப்பாளருமான எஸ் பி பாலசுப்ரமணியம் 3ம் ஆண்டு நினைவு தினம் இன்று

ஆந்திராவில் பிறந்து வளர்ந்த எஸ்பி பாலசுப்ரமணியம் தெலுங்கு தமிழ் ஹிந்தி மலையாளம் என இந்தியாவின் அனேக மொழிகளிலும் பாடி ஒட்டுமொத்த தேசத்தின் குரலாக ஒலித்தவர். எஸ் பி பாலசுப்ரமணியம் வென்றுள்ள ஆறு தேசிய விருதுகளும் 4 வித்தியாசமான மொழிகளில் இருந்து கிடைத்தது என்பது எஸ்.பி.பியின் பன்மொழி திறனுக்கு சான்று. 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ள எஸ் பி பாலசுப்ரமணியம் உலகின் அதிக பாடல்களை பாடிய சாதனைக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். மேலும் ஒரே நாளில் 21 பாடல்களை பாடிய பாடகர் என்ற தகர்க்க முடியாத சாதனையையும் வசப்படுத்தியவர்.

டிஎம் சௌந்தர்ராஜன் குரலை ஈடுசெய்ய இனி ஒரு பாடகர் தமிழ் சினிமாவிற்கு கிடைப்பது அரிது என்று பேசப்பட்ட காலகட்டத்தில் வாய்ப்புக்காக இசையமைப்பாளர்களின் ஸ்டுடியோ படிகளில் ஏறி இறங்கிய எஸ் பி பாலசுப்பிரமணியம், ஆரம்ப கட்டத்தில் புறக்கணிக்கப்பட்டது அவருடைய மோசமான தமிழ் உச்சரிப்புக்காகத்தான். எம்எஸ் விஸ்வநாதனின் ஆலோசனைக்கு இணங்க ஓராண்டு பயிற்சி பெற்று தமிழ் சினிமாவில் பாடும் வாய்ப்பை பெற்ற எஸ்பிபி கிடைத்த முதல் வாய்ப்பில் இருந்து கடைசி நாள்வரை 54 ஆண்டுகளாக எல்லா மொழிகளிலும் சரியான உச்சரிப்புடன் பாடிய பாடகர் என்ற சிறப்புடன் விளங்கினார்.

சங்கீதத்தில் கை தேர்ந்த ஞானம் பெற்ற எஸ் பி பாலசுப்ரமணியம், பாடகராக மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும் தன்னுடைய முத்திரையை தமிழ்சினிமாவின் வலுவாக பதித்துள்ளார். 1991 ஆம் ஆண்டு எஸ் பி பாலசுப்ரமணியம் இசையமைத்து நடித்து வெளியான சிகரம் திரைப்படத்தில் நடிப்பு இசை என இரண்டு துறைகளிலுமே தனது புலமையையும், அனுபவத்தையும் வெளிப்படுத்தியிருப்பார் எஸ்பிபி.

எம்எஸ் விஸ்வநாதன் தமிழ் சினிமாவில் கோலோச்சி வந்த காலகட்டத்தில் அறிமுகமான எஸ் பி பாலசுப்ரமணியம் இளையராஜா இசையமைப்பாளராக வலம் வந்த நேரத்தில் உச்சத்தில் இருந்து வந்தார். பின்னர் ஏ.ஆர் ரஹ்மான் தலைமுறையிலும் தன்னை தக்க வைத்துக்கொண்டு அனிருத் வரை பல தலைமுறை இசையமைப்பாளரை கடந்தும் தனது தன்னிகரில்லாத கம்பீரக்குரலால் ரசீகர்களை வசீகரித்தார்.

பாடகராக தமிழ் சினிமாவில் உச்சத்தில் வலம் வந்தபோது நடிகராக பல திரைப்படங்களில் நடித்துள்ள எஸ் பி பாலசுப்ரமணியம் புதிய முயற்சிகளை முயன்று பார்ப்பதில் எப்பொழுதும் ஆர்வம் காட்டி வந்துள்ளார். கேளடி கண்மணி திரைப்படத்தில் மண்ணில் இந்த காதலன்றி பாடலையும், அமர்க்களம் திரைப்படத்தில் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாடலையும் மூச்சுபயிற்சியூடாக பாடி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய எஸ் பி பாலசுப்ரமணியம் தொலைக்காட்சித் தொடர்கள் தமிழகத்தில் அறிமுகமான காலகட்டத்தில் அந்த தொடர்களின் தொடக்கப் பாடலை பாடி இல்லங்கள்தோறும் தனது குரல் தினமும் ஒலிப்பதை உறுதி செய்தார்.

பத்மஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய இந்திய அரசின் மிக உயரிய விருதுகளை வென்ற எஸ் பி பாலசுப்ரமணியம் தலைமுறைகள் கடந்தும் தன்னை தகவமைத்துக் கொண்டு, இளம் இசையமைப்பாளர்களிடன் நட்புடன் பழகி தனது குரலை ரசிகர்கள் மனதில் தொடர்ந்து பதிய வைத்த வண்ணம் இருந்தார். அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக தமிழ்சினிமாவை ஆக்கிரமித்திருந்த எஸ்பிபியின் காந்தக் குரல் காற்றில் கரைந்தது தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் ஆறாத வடுவாக அப்படியே தங்கி விட்டது!

“பத்மபூஷன் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் புகழ் ஏழு தலைமுறைக்கும் வாழும்”

பகிரவும்...