Main Menu

என்.டி.திவாரி மகன் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்- மனைவி கைது

உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் மகன் ரோகித் திவாரியை கொலை செய்ததாக அவரது மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் மகன் ரோகித் சேகர் திவாரி கடந்த 16-ம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது கழுத்து நெரிக்கப்பட்டிருப்பதும், அவர் மூச்சுத்திணறி இறந்திருப்பதும் தெரியவந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரோகித்தின் மனைவி அபூர்வா மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். 

இதற்கிடையே, ரோகித்தின் தாயார் உஜ்வாலா, காவல்துறையில் அளித்த தகவல் விசாரணையின் போக்கை மாற்றியது. தன் மருமகள் அபூர்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பணம்தான் குறிக்கோள் என்றும், ரோகித்தின் சொத்தை அபகரிக்க விரும்பியதாகவும் உஜ்வாலா குற்றம்சாட்டினார். 

இதன் அடிப்படையில் விசாரணை நடத்தியபோது, ரோகித்தின் மனைவி மீது சந்தேகம் வலுத்தது. எனவே, அவரிடம் ஞாயிற்றுக்கிழமை போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது, அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் போலீசாரின் சந்தேகம் உறுதி செய்யப்பட்டது. எனவே, விசாரணையின் முடிவில் அபூர்வாவை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

ரோகித்-அபூர்வா தம்பதியரின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை என்றும், இருவரும் அடிக்கடி சண்டை போட்டதாகவும் விசாரணையில் தெரியவந்திருப்பதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

பகிரவும்...