Main Menu

எத்தியோப்பியாவில் பேருந்து மீது கொடூர தாக்குதல் – 34 பேர் உயிரிழப்பு

எத்தியோப்பியாவில் பேருந்து மீது மர்ம நபர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் 34 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வரும் அதேவேளை, சில பயங்கரவாத குழுக்களும் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

இதன் காரணமாக அந்த நாட்டு மக்கள் சூடான், தெற்கு சூடான் உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர். இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக அங்கு இன ரீதியிலான மோதல்கள் வலுத்து வருகின்றன.

இந்த நிலையில் அந்த நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள பெனிஷாங்குல்-குமுஸ் பிராந்தியத்தில் பயணிகள் பேருந்தொன்றின் மீது மர்ம நபர்கள் சிலர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 34 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அதனை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தாக்குதல் நடந்த பகுதியில் இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு தப்பியோடிய மர்ம நபர்களை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் தேசிய மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

பகிரவும்...