Main Menu

ஊடகவியலாளர்கள் இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் : விஜேபால

ராஜபக்ஷக்கள் ஆட்சிக்கு வந்து இரு வாரங்களுக்குள்ளேயே சுவிஸ் தூதரக உத்தியோகஸ்தர் கடத்தப்பட்ட சம்பவத்தின் அடுத்த கட்டம் ஊடகவியலாளர்களுக்கே அச்சுறுத்தலாக அமையும் என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாராச்சி , ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி காலத்தில் காணப்பட்ட ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது : 

மஹிந்த ராஜபக்ஷ அல்லாமல் கோத்தாபய ராஜபக்ஷ நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட போதும், அதன் பின்னர் அவர் சில விடயங்களை முன்னெடுத்த போதும் கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் நாட்டில் காணப்பட்ட அச்சுறுத்தல் நிலைமை தொடராது என்றும், மாற்றமொன்று ஏற்படும் என்றும் எதிர்பார்த்தோம்.

எனினும் ஆட்சிக்கு வந்து இரு வார காலத்துக்குள் பழைய நிலைமை ஆரம்பமாகியுள்ளது. 

கடந்த வாரம் இலங்கையிலுள்ள சுவிஸ் தூதரகத்தில் பணிபுரியும் அதிகாரியொருவர் கடத்தப்பட்ட சம்பவம் இதற்கு சிறந்த உதாரணமாகும்.

இந்த கடத்தல்கள் அச்சுறுத்தல்கள் என்பன அடுத்த கட்டடமாக ஊடகவியலாளர்களையே பாதிக்கும். அதனால் தான் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவியை நீக்கி அவரை பொலிஸ் சட்ட பிரிவின் பணிப்பாளராக நியமித்திருக்கிறார்கள். 

ராஜபக்ஷக்கள் உண்மையில் ஜனநாயக ஆட்சியை முன்னெடுப்பதாக இருந்தால் ஏன் இவ்வாறான செயல்களை செய்ய வேண்டும் என்பதே எமது கேள்வியாகும். 

அது மாத்திரமின்றி எவ்வித குற்றச்சாட்டுக்களும் இன்றி, விசாரணைகளும் இன்றி 704 குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே வேளை நாமல் ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு வெளிநாடு செல்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. 

குறித்த குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீதிமன்றத்தினால் விதிக்கப்படவில்லை. குடிவரவு – குடியகழ்வு திணைக்களத்தினாலேயே விதிக்கப்பட்டுள்ளது.

இதனை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும். குற்றப்புலனாய்வு பிரிவின் சிறப்பு விசாரணை அதிகாரி வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உண்மையில் அவர் அடைக்கலம் கோரி வெளிநாடு சென்றாறா அல்லது செல்ல வைக்கப்பட்டாரா என்ற சந்தேகம் எழுகிறது. 

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை கைது செய்து 200 வருட சிறை தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கூறிய ஒரேயொரு அதிகாரி நிஷாந்த சில்வா மாத்திரமே. இவ்வாறானவரை கைது செய்யுமாறு பௌத்த மதகுருமார்கள் சிலர் கோருகின்றனர். இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் என அவர் தெரிவித்தார்.

பகிரவும்...