இஸ்லாமியர்கள் அவர்களின் கோபத்தை காட்ட உரிமை உள்ளது: பிரான்ஸ் தாக்குதல் குறித்து மகாதீர் டுவீட்!
பிரான்ஸில் தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், ‘இஸ்லாமியர்கள் அவர்களின் கோபத்தை காட்ட உரிமை உள்ளது’ என மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, ‘வரலாற்றில் பல முஸ்லிம்களை கொன்ற நாடு பிரான்ஸ். தற்போது இஸ்லாமியர்கள் அவர்களின் கோபத்தை காட்ட உரிமை உள்ளது. வெவ்வேறு கலாசாரத்தையும் மதிக்கத் தெரிந்து கொள்ள வேண்டும். தன்னுடைய மேற்கத்திய நடைமுறை, மதிப்புகள், வழக்கத்ததை திணிக்க முற்படக்கூடாது’ என குறிப்பிட்டார்.
அவர் பதிவிட்ட 13க்கும் அதிகமான டுவிட்டுகளில் சில விதி மீறல் பதிவு எனக்கூறி டுவிட்டர் நிறுவனம் நீக்கி உள்ளது.
அவரது கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் நூற்றுக்கணக்கில் டுவிட்டர் பயனர்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
டுவிட்டர் ஆரம்பத்தில் கருத்துக்களை நீக்க மறுத்துவிட்டது. ஆனால் இறுதியாக பிரான்ஸ் அரசாங்கத்தின் கடுமையான எதிர்வினையைத் தொடர்ந்து அவ்வாறு செய்தது.
நைஸில் நடந்த தாக்குதல் குறித்து மகாதீர் ஒருபோதும் நேரடியாகக் குறிப்பிடவில்லை.