Main Menu

இலவசமாக உணவளிக்கும் மன்னரின் உணவகம்

அமெரிக்காவில் ரெஸ்டாரண்ட் ஒன்றில் பசிக்கு உணவு வேண்டும் என கேட்பவர்களுக்கு எவ்வித கேள்வியும் இன்றி விரும்பிய உணவு வழங்கப்படுகிறது. இது குறித்த சுவாரஸ்ய தகவலை பார்ப்போம்.

பொதுவாக ஓட்டல்களில், விலைக்கு ஏற்ப மெனு கார்டு ஒன்று போட்டு, அதில் உணவின் வகைகளுக்கு ஏற்றார்போல் மதிப்பு கொடுக்கப்பட்டிருக்கும். மிகப்பெரிய ரெஸ்டாரண்டுகளில் விலை எப்படி இருக்கும் என சொல்லவா வேண்டும்? அதிலும் அமெரிக்காவின் முக்கிய பகுதியில் உள்ள ரெஸ்டாரண்ட் என்றால், விலையை சொல்ல வேண்டியதில்லை. 

ஆனால், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை இருக்கும் பகுதிக்கு மிக அருகில் உள்ளது  ‘சகீனா ஹலால் கிரில் ரெஸ்டாரண்ட்’. இதன் உரிமையாளர் கசி மன்னன். அவரது பெயருக்கு ஏற்றார்போல் வாரி வழங்கும் மன்னர் குணம் படைத்தவராகவே இருக்கிறார் என்றுதான் கூற தோன்றுகிறது. 

இந்த ரெஸ்டாரண்ட் கடந்த 2013ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது தொடங்கிய நாள் முதல் இன்று வரை ‘பசிக்கிறது. சாப்பாடு வேண்டும். ஆனால், பணம் இல்லை’ என கேட்டால் உணவு வழங்கப்படுகிறது. இந்த சேவை குறித்து ஏழைகளுக்கு மன்னராக மாறிப்போன கசி மன்னன் கூறியதாவது:

ரெஸ்டாரண்ட் வாசலில் நின்று பசிக்கிறது என யார் கேட்டாலும், எவ்வித பாகுபாடுமின்றி அவர்களையும் உள்ளே அழைத்து, பணம் கொடுத்து சாப்பிடுபவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்களோ அதேப்போல் விரும்பிய உணவு என்ன என கேட்டு உணவு வழங்கப்படுகிறது. நான் பாகிஸ்தானைச் சேர்ந்தவன். நான் வளரும் போது ஏழ்மையின் பிடியில் சிக்கினேன். பசிக்கான அர்த்தமும் , அதன் கொடுமையும் எனக்கு தெரியும். 

எனவேதான், நான் அமெரிக்கா வந்து நல்ல நிலைமை அடைந்தவுடன் இந்த முடிவெடுத்தேன். இங்கு பல இடங்களில் வீடுகள் இன்றி, உணவின்றி மக்கள் தவிப்பதை கண்டேன். அது என்னை மிகவும் பாதித்தது. 

அவர்களுக்கு உணவும், ஆதரவும் மிகவும் அவசியம் என உணர்ந்தேன். எனவேதான் உணவு வேண்டும் என கூறுபவர்களை கைகளால் அரவணைத்து உள்ளே வரவேற்று, அவர்கள் விரும்பியபடி உணவளித்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். 

பகிரவும்...