Main Menu

இலங்கையில் சீனாவின் இராணுவ தளம்? புலனாய்வு தகவலை நிராகரித்தது இலங்கை

இலங்கையில் இராணுவதளங்களை உருவாக்குவதற்கு சீனா திட்டமிடுகின்றது என அமெரிக்காவின் புலனாய்வுபிரிவுகள் வெளியிட்டுள்ள தகவலை இலங்கை நிராகரித்துள்ளது.

இலங்கையின்   எல்லைக்குள் தளங்களை அமைப்பது தொடர்பில் சீனா உட்பட எந்த நாட்டுடனும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் புலனாய்வு அமைப்புகளின் தகவல் தவறானது இதனை நாங்கள் முற்றாக நிராகரிக்கின்றோம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தனது எல்லைக்குள் எந்த சூழ்நிலையிலும்  எந்தநாடும் தளங்களை அமைப்பதற்கு அனுமதிக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இலங்கை உட்பட பல நாடுகளில் இராணுவ கட்டமைப்புகளை ஏற்படுத்துவது குறித்து சீனா ஆராய்ந்து வருகின்றது என அமெரிக்க புலனாய்வு பிரிவினர் தமது சமீபத்தைய அறிக்கையில் தெரிவித்துள்ளதாக ஐஏஎன்எஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜிபுட்டியில் உள்ள அதன் இராணுவதளத்தையும் கம்போடியாவில் உள்ள அதன் கடற்படை தளத்தையும் மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சீனா இதற்கு அப்பால் இலங்கை உட்பட பல நாடுகளில் தனது தளங்களை உருவாக்க முயல்கின்றது என அமெரிக்க புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்  என ஐஏன்என்எஸ் தெரிவித்துள்ளது.

சீனா 2035  ஆண்டளவில் முழுமையாக நவீனமயமாக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு மற்றும் இராணுவ படையை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்துகின்றது 2049ம் ஆண்டுக்குள் சீன இராணுவத்தை உலகதரம் வாய்ந்ததாக மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளது என அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் மதிப்பிட்டுள்ளன.

இதேகாலப்பகுதியில் சீனாவின் கம்யுனிஸ்ட் கட்சி தனது இறையாண்மை பிரதேசம் என கருதும் பகுதிகளை பாதுகாப்பதற்கு சீன இராணுவத்தை பயன்படுத்தவும் பிராந்திய விவகாரங்களி;ல் தனது முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தவும் தனது இராணுவத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது எனவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ள அமெரிக்க இராணுவம் சர்வதேச அளவில் தனது வலிமையை வெளிப்படுத்தவும் நீரிணை மோதலின் போது அமெரிக்காவின் தலையீட்டை தடுக்கவும் எதிர்க்கவும் தனது இராணுவத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

பகிரவும்...