இலகு சுகாதார சேவைக்காக குடும்ப வைத்தியர் முறை விரைவில்..: ஜெனீவா மாநாட்டில் அமைச்சர் ராஜித
எமது நாட்டில் வாழும் அனைத்து மக்களும் இலகுவாக சுகாதார சேவையைப் செலவின்றிப் பெற்றுக்கொள்வதற்காக சுகாதார அமைச்சு குடும்ப வைத்தியர் முறையை நடைமுறைப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தன தெரிவித்துள்ளார்.
ஜெனீவா நகரில் நேற்று முன்தினம் முதல் ஆரம்பமாகி நடந்துவரும் உலக சுகாதார மாநாட்டில் அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது,
இலங்கையில் தொற்றாநோய்களை ஆரம்பத்திலேயே இனங் காண்பதற்கும் அவை ஏற்படாது தடுப்பதற்கும் என நாடளாவிய ரீதியில் 846 ஆரோக்கிய வாழ்வு நிலையங்கள் மற்றும் 906 சுகவனிதையர் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. புகையிலைக்கு விதிக்கப்பட்டுள்ள 90 வீத வரி மற்றும் விற்பனை சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கடுமையான விதிகள் காரணமாக தற்போது 13 வீதமாக உள்ள புகை பிடிப்போர் எண்ணிக்கை எதிர்காலத்தில் மேலும் குறையும்.
மேலும் உணவு மற்றும் பானங்களில் கலந்துள்ள சீனி, உப்பு மற்றும் திரிபடைந்த கொழுப்பு ஆகியவற்றின் அளவுகளை காட்டுவதற்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிறக்குறியீட்டு முறை குறித்தும் அமைச்சர் விளக்கினார்.
சிறுநீரக நோயாளர்களது நன்மை கருதி அந்த நோய்த்தாக்கம் அதிகமுள்ள பிரதேசங்களில் தற்போது செயற்பட்டுவரும் 600 குருதிச் சுத்திகரிப்பு உபகரணங்களின் எண்ணிக்கையினை இவ்வருட இறுதிக்குள் 900 ஆக அதிகரிக்க உள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் புதிதாக செயற்பட ஆரம்பித்துள்ள மூன்று புதிய மருத்துவ பீடங்கள் மற்றும் 2000 தாதியர்களை பயிற்றுவிக்கவல்ல புதிய தாதிய பீடம் ஆகியவற்றின் மூலம் நாட்டில் நிலவும் மருத்துவ ஆளணிப் பற்றாக்குறையை எதிர்காலத்தில் இல்லாது ஒழிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதனையும் அவர் சுட்டிக்காட்டியு்ளமையும் குறிப்பிடதக்கது.