Main Menu

இனவழிப்பின் மறு வடிவமே வடக்கு கிழக்கில் நில அபகரிப்பு- சர்வதேச மாநாட்டில் சி.வி. உரை!

வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் நிலம் அபகரிக்கப்படுவதானது தமிழ் இனம் அழிக்கப்படுவதற்குச் சமனானது என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நில அபகரிப்பு ஒரு இனப் படுகொலையாகவே பார்க்கப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கலந்துகொண்ட சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு, ‘தமிழர் தாயகத்தை இழத்தல்’ என்ற தலைப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த மாநாடு இலங்கை நேரப்படி நேற்று (சனிக்கிழமை) மாலை சூம் தொடர்பாடல் ஊடாக இடம்பெற்றிருந்தது.

இதன்போது, உரையாற்றிய சி.வி.விக்னேஸ்வரன், “தமிழ் மக்கள் இந்த நாட்டின் சுதேச (முதலாவது) குடிமக்கள். 3000 ஆண்டுகளுக்கு மேலாக நாம் இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்றோம். அந்நியர்களின் காலனியாதிக்கம் 1505ஆம் ஆண்டு ஏற்படும் வரை வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் நிலப்பரப்பு தமிழ் மன்னர்களின் முழுமையான ஆளுகையின் கீழ் செழிப்பாக இருந்தது.

பிரித்தானியர்களின் ஆட்சியின்போது 1833ஆம் ஆண்டு இலங்கையின் நிர்வாகம் ஒன்றாக்கப்பட்டு பின்னர் 1948ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்த பின்னர் அதிகாரம் சிங்கள மக்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்ட நாள் முதல் எமது நிலங்கள் அதிகார பலத்தின் மூலம் சிங்கள அரசாங்கங்களினால் அபகரிக்கப்பட ஆரம்பிக்கப்பட்டது.

1970களில் ஆயுதப் போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே தமிழ் மக்கள் பாரம்பரியமக வாழ்ந்துவரும் கிழக்கு மாகாணத்தின் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதி நிலம் எம்மிடம் இருந்து பறிக்கப்பட்டுவிட்டது. எமக்கு எதிரான இந்த நில ஆக்கிரமிப்பு என்பது சத்தம் இன்றி எமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் ஒரு பெரும் யுத்தமாக இன்று மாறியிருக்கிறது.

நிலம் மட்டுமன்றி, நிலத்துடன் சேர்த்து எமது வாழ்வும் அடையாளமும் வரலாறும் சேர்த்தே அழிக்கப்படுகிறது. இதுவொரு பெரும் மிகப்பெரும் மனித உரிமை மீறல் ஆகும். அரசாங்கங்கள் மேற்கொண்ட இந்த இந்த மனித உரிமை மீறல்களே தமிழ் மக்கள் தமது நிலத்தையும் வாழ்வையும் அடையாளத்தையும் பாதுகாப்பதற்காக ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிப்பதற்குக் காரணமாக அமைந்தது.

ஆயுதப் போராட்டம் 2009ஆம் ஆண்டு ஒரு பெரும் இனவழிப்புடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோதிலும் எமக்கு எதிரான நில ஆக்கிரமிப்பு யுத்தம் இன்னமும் நிற்கவில்லை. மாறாக, மேலும் தீவிரம் அடைந்துள்ளது. எமது மக்களுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்ட இராணுவம், வடக்கு கிழக்கில் தற்போது எமது நிலங்களை ஆக்கிரமித்துள்ளது. அபிவிருத்தி, தொல்பொருள் ஆய்வு, காடுகள் ஒதுக்கீடு, வன விலங்குகள் சரணாலயம், பறவைகள் சரணாலயம் என்ற போர்வைகளில் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம்இ வனவிலங்குகள் திணைக்களம், மகாவலி அதிகாரசபை, காட்டிலாகா, வீடமைப்பு அதிகாரசபை ஆகிய திணைக்களங்கள் உட்பட பல்வேறு அரச திணைக்களங்கள் எமக்கு எதிரான இந்த நில ஆக்கிரமிப்பு யுத்தத்தில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளன.

இதனை அண்மையில் அமெரிக்காவின் ஓக்லாந்து நிறுவனம் வெளியிட்ட முடிவற்ற போர் என்ற ஆய்வு அறிக்கையில் ஆதாரங்களுடன் வெளியிட்டது.

இலங்கையில் நடைபெறும் நில ஆக்கிரமிப்பு பற்றி ஆராய்ச்சி செய்த இஸ்ரேலிய அறிஞரான ஓரன் யிட்ச்பச்சேல் என்பவர் இலங்கையை இனநாயக நாடு என்று விபரித்திருக்கிறார். தனி ஒரு இனத்தின் மேலாதிக்கத்தை நாடு முழுவதும் ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயற்படும் அரசுகளை இனநாயக நாடு என்று அவர் விளக்கம் அளிக்கிறார்.

1948ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது முதல் மிகவும் நுட்பமான முறையில் ஒரு இனநாயக நாடாக கட்டமைக்கப்பட்டுவருகின்றது. இலங்கையின் இத்தகைய இனநாயக கட்டமைப்பே இந்த நாட்டில் ஸ்திரமற்ற தன்மைஇ இன முரண்பாடுகள்இ ஆயுத யுத்தம் மற்றும் மனித உரிமைகள் மீறல்களுக்கு காரணமாக இருந்து வருகின்றது. ஆகவேஇ இந்த உண்மையை புரிந்துகொள்ளாமல் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு சமாதான முயற்சிகளோஇ பொறுப்புக்கூறல் முயற்சிகளோ அல்லது நீதிக்கான முயற்சிகளோ வெற்றி அளிக்கப்போவதில்லை.

இதனை சர்வதேச சமூகம் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். மனித உரிமைகள் பாதுகாக்கப்படாமல் சமாதானத்தை அடைய முடியாது, அதேபோல, மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் சமாதானம் அவசியம். இந்த இரண்டும் ஒன்றோடு ஒன்று சார்ந்துள்ளன. நில உரிமைகள் மிக முக்கியமான மனித உரிமைகள் ஆகும். ஒரு இனத்தின் அடையாளம்இ வாழ்வு, செழிப்பு ஆகியவற்றின் உயிர் மூலமாக இருப்பது அந்த இனத்தின் பாரம்பரிய நிலம். வடக்கும் -கிழக்கும் எமது பாரம்பரிய பிரதேசங்கள். வடக்கும் -கிழக்கும் எமது தாயகம். எமது இந்த தாயக நிலம் எம்மிடம் இருந்து அபகரிக்கபப்டுவது என்பது எமது இனம் அழிக்கப்படுவதற்கு சமனானது. ஆகவேதான் நில அபகரிப்பு ஒரு இனப்படுகொலை ஆகின்றது.

அதனால்தான்இ எமது பாரம்பரிய வாழ்விடங்களான வடக்கையும் -கிழக்கையும் பாதுகாக்கும் வழிமுறைகளை, சவால்களை ஆராய்வதற்காக ‘தமிழர் தாயகத்தை இழத்தல்’ என்ற தலைப்பில் இன்றைய இந்த சர்வதேச மாநாட்டை நாம் ஏற்பாடு செய்துள்ளோம்.

இந்த மாநாடு ஒரு ஆரம்பம். எமது நிலத்தை நாம் பாதுகாப்பதற்கு சர்வதேச மட்டத்திலும், உள்ளூர் மட்டத்திலும் நாம் மேற்கொள்ளக்கூடிய வழிவகைகளையும், உபாயங்களையும் வகுத்து செயற்படும் பொருட்டு தொடர்ச்சியாக பல நிகழ்வுகள் நடைபெறும். எமது இந்த நில மீட்பு போராட்டத்துக்கு சர்வதேச சமூகம் எல்லாவகையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கவேண்டும் என்று இந்த சந்தர்ப்பதில் வேண்டுகோள் விடுக்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...