Main Menu

இந்திய பிரதமர் மாலை நாடுதிரும்பினார்

இலங்கை விஜயத்தை நிறைவு செய்துக் கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோதி இன்று மாலை நாடுதிரும்பினார்;

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அமைச்சர் சஜித் பிரேமதாஸவும் அவரை வழியனுப்பி வைத்தனர்.

இருநாட்டு உறவுகளை மேம்படுத்தல், பிராந்தியத்தின் பாதுகாப்பு, சமாதானம், நிலைபேறான தன்மை ஆகியன தொடர்பில் இலங்கை இந்தியத் தலைவர்கள் கலந்துரையாடியுள்ளனர். அத்துடன், பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இலக்காகிய இரு நாடுகள் என்ற வகையில், பயங்கரவாதத்தைக் கடுமையாகக் கண்டிக்க வேண்டுமென்றும் பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டுமென்றும் இரு நாட்டுத் தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கைக்கு வந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே, மேற்கண்ட இணக்கம் எட்டப்பட்டுள்ளதென, ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டு தாக்குதலின் பின்னர், இலங்கையில் அரச முறை சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட முதலாவது அரச தலைவர் இந்திய பிரதமராவார்.

பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக பதற்ற நிலை காணப்படும் இந்தச் சூழ்நிலையில், தனது நாட்டுக்கு வருகை தந்து உலகத்தினருக்கு வழங்கிய நற்செய்தி தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்திய பிரதமருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

 அயல் நட்பு நாடான இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான நம்பிக்கை மற்றும் நட்புறவு இந்திய பிரதமரின் இந்த விஜயத்தின் மூலம் மேலும் வலுவடைந்திருப்பதாக, ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் இந்த விஜயமானது இலங்கையின் பொருளாதார, வர்த்தக, சுற்றுலா போன்ற துறைகளின் வளர்ச்சிக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும் என்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

இக்கட்டான சூழ்நிலைகளில் அயல் நட்பு நாடுகளுக்கு உறுதுணையாக இருப்பது தனது கடமையாகுமென்று, இதன்போது இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார.

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை மிகவும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா, இலங்கை மீது வைத்துள்ள நம்பிக்கையை எதிர்காலத்திலும் இவ்வாறே பாதுகாக்கப்படுமென, அவர் தெரிவித்தார். அத்தோடு, அனைத்து தரப்புகளின் உதவியுடன் சகல இனத்தோருக்கும் நீதியை நிலைநாட்டும் வகையில் கடமையாற்றி வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வேலைத்திட்டங்கள் தொடர்பில், இந்திய பிரதமர் தனது மகிழ்ச்சியை வெளியிட்டார்.

இருநாட்டு உறவுகளை மேம்படுத்தல், வலயத்தின் பாதுகாப்பு, சமாதானம், நிலைபேறான தன்மை ஆகியன தொடர்பில் இருநாட்டு தலைவர்களும் கலந்துரையாடினர். இரு நாடுகளுக்கிடையில், நீண்டகால, ஆழமான நட்புக்கு பரஸ்பர நம்பிக்கை, மரியாதை, ஒத்துழைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட கொள்கையே, காரணமாக அமைந்திருப்பதாகவும் இரு நாடுகளுக்குமிடையிலான உறவை மேலும் வலுபடுத்திக்கொள்ள வேண்டுமென்றும், இரு நாட்டுத் தலைவர்களும் இதன்போது இணங்கினர் என்றும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனக்கு வழங்கிய உற்சாகமான வரவேற்புக்கும் உபசரிப்புக்கும் ஜனாதிபதிக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும், இலங்கை மக்களுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

பகிரவும்...