Main Menu

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தைத் தாண்டியது!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை கடந்ததுடன் கடந்த 24 மணி நேரத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 265 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆயிரத்து 553 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 36 பேர் மரணமடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 543 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2 ஆயிரத்து 547 பேர் குணமடைந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் அதிக அளவாக 4 ஆயிரத்து 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 223 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர். தலைநகர் டெல்லியில் 2003 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 45 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் ஆயிரத்து 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு 15 ஆக உள்ளது.

இதேவேளை, இந்தியாவில் சமூகத் தொற்று ஏற்படுவதைத் தவிர்க்க ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பரிசோதனைகள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், வைரஸ் தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகின்றது.

பகிரவும்...