Main Menu

அமைப்பு சாரா தொழிலாளர் இழப்பீடு வழங்குங்கள்- மத்திய அரசிடம் கமல் வேண்டுகோள்!

கொரோனா வைரஸ் பீதியால் அமைப்புசாரா மக்களின் வாழ்வாதாரம் முடங்கியுள்ள நிலையில் அவர்களுக்கு இழப்பீடுகளை வழங்குமாறு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பான அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில், “கொரோனா வைரஸ் மானுட சமூகம் இதுவரை சந்தித்திராத பேரிடர் ஆகும். இந்தக் கடினமான சூழலில் மத்திய, மாநில அரசுகள் துரிதமாகவும், பொறுப்பாகவும் செயற்பட்டு எடுத்துள்ள முயற்சிகள் பாராட்டத்தக்கவை.

நமது நாட்டின் உழைக்கும் மக்களில் 90 சதவீதம் பேர் அன்றாட வருமானத்தை நம்பி, வாழ்வாதாரத்துக்குப் போராடும் அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆவர். பரந்து விரிந்து இருக்கும் நம் நாட்டையும், பொருளாதாரத்தையும் கட்டமைக்கும் அந்த தொழிலாளர்களின் உழைப்பு கொண்டாடப்படாமல் போவது போல, அவர்களின் வாழ்வாதார இழப்பும் கண்டுகொள்ளப்படாமல் சென்று விடுகிறது.

மனித இனம் அச்சுறுத்தப்பட்டு கொண்டிருக்கும் இந்த வேளையில், கோடிக்கணக்கான இந்த தொழிலாளர்களின் வாழ்வும், அன்றாட வருமானத்தை நம்பி உழைக்கும் அவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே இந்த கொள்ளை நோயால் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீட்டை அவர்களுடைய வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும்” என் அவர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...