Main Menu

அமைதி மற்றும் அன்பின் அடையாளத்தை இயேசு இப்பூவுலகில் விட்டுச்சென்ற நாள் – பிரதமர்

அமைதி மற்றும் அன்பின் அடையாளத்தை இப்பூவுலகில் விட்டுச்சென்ற இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நத்தார் நினைவூட்டுகிறது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இறைவனின் அன்பும் மனித கண்ணியமும் மனிதநேயத்தை அடிப்டையாகக் கொண்ட சமுதாயத்திற்கு நம்பகமான அடித்தளமாக அமைந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெத்லஹேமில் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த இயேசு கிறிஸ்து, இவ்வுலகை யதார்த்தமாக நோக்குவதற்கு அவரது பிறப்பு முதலே முன்மாதிரியாக திகழ்ந்தார் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லுள்ளம் படைத்தவர்கள் அமைதியை பகிர்ந்துக்கொள்வார்கள் என்றும்  தம் மீது வெறுப்பு கொண்டவர்கள் மீதும் அன்பு காட்டுபவர்களாக திகழ்வார்கள் என்பதோடு, அன்பு, அமைதி மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றின் பொருள் உணர்ந்து தமது வாழ்க்கையை உயிர்ப்பித்துக்கொள்வர் என்றும் பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களை விடுவிக்கவும் இவ்வுலகில் சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதற்காகவுமே இயேசு கிறிஸ்து தனது முழு வாழ்நாளையும் அர்ப்பணித்தார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த வெளிப்பாட்டை சரியான முறையில் உணர்ந்து, இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதன் மூலம் ஒவ்வொரு கிறிஸ்தவரின் வாழ்க்கையும் ஒளிமயமாகும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா தொற்று நிலைமைக்கு மத்தியில் வீழ்ச்சியடைந்த உலகை மீள புத்துயிர் பெறச் செய்வதுடன், நம்பிக்கை நிறைந்த எதிர்பார்ப்புகளுடன் நத்தார் தினத்தை அர்த்தமுள்ளதாக மாற்றுவது மக்களின் பொறுப்பாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

‘நட்சத்திர ஒளியும் கிறிஸ்துவின் பிறப்பும் உலகை உயிர்ப்பிக்கும்’ எனும் தொனிப்பொருளில் இம்முறை நத்தார் தினம் ஒட்டுமொத்த உலகவாழ் மற்றும் இலங்கை வாழ் கிறிஸ்தவ மக்களுக்கு அர்த்தமுள்ள மற்றும் மகிழ்ச்சியான நாளாக அமைய வேண்டும் என பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...