Main Menu

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்

சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தொடர் சிகிச்சை பெற்று வந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்.

நேற்று (சனிக்கிழமை) இரவு, 11.15 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த 12ஆம் திகதி திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவர், முண்டியம்பாக்கத்தில் உள்ள அரச  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன்போது, அமைச்சர் துரைக்கண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

மேலும், அவருக்கு  இதய பாதிப்புஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்தியர்களின் கண்காணிப்பில் இருந்து வந்தார்.

எனினும், அவரது நுரையீரலில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருவதாக காவேரி  வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்தது.

இந்நிலையிலேயே நேற்று இரவு சிகிச்சை பலனின்றி, அமைச்சர் துரைக்கண்ணு  உயிரிழந்துள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இரங்கல்

அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழக வேளாண்துறை அமைச்சராக இருந்து வந்த துரைக்கண்ணு, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தார்.

மேலும், அதற்கான சிகிச்சையை சென்னை தனியார்  வைத்தியசாலையில் அவர் பெற்றுவந்த நிலையில்,  நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவு 11.15 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், அவரின் மறைவுக்கு பல்வேறு கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அந்தவகையில், அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு, அ.தி.மு.க.வுக்கு பேரிழப்பு. அவர் ஒரு எளிமையான மனிதர். பொதுமக்களிடம் அன்பாக பழகக்கூடியவர். அவரது மறைவுக்கு அரச விதிமுறைப்படி இரங்கல் அனுசரிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இதேவேளை, அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ள இரங்கல் பதிவில், “பெரும் அன்புக்குரிய மாண்புமிகு தமிழக வேளாண்துறை அமைச்சர், துரைக்கண்ணு, காலமான செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...