Main Menu

அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி கைக் குழந்தைகளுடன் அவதியுறும் பெண்கள்

நாடளாவிய ரீதியில் ´கொரோனா´ தொற்றும் அதன் பாதுகாப்புக்கும் என அரசாங்கம் மேற்கொண்ட ஊரடங்கு சட்ட நடைமுறை எமது நாட்டில் கொரோனா தொற்று பரவலை பாரிய அளவு குறைத்தது என்பது உண்மையே.

ஆனாலும் இவ்வாறான சட்ட நடைமுறைகள் வறுமையையும் பசியையும் குறைக்கவில்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

ஊரடங்கு நடை முறை இலங்கையில் நடுத்தர குடும்பங்களின் வாழ்வாதாரத்தையே முற்றாக கேள்விக்குறியாக்கிய நிலையில் நாளாந்த கூலித்தொழிலில் ஈடுபடும் வறுமை கோட்டுக்கு உற்பட்ட குடும்பங்களின் நிலையை எவ்வாறு மாற்றி அமைத்திருக்கும் என்பதை கற்பனையில் காணும் போதே கண்ணீர் சிந்தும்.

ஆனாலும் அவ்வாறான நிலையிலும் ஒரு நேர உணவிருந்தாலே போதும் என்ற மன நிறைவுடன் ஊரடங்கு நிலையை கடந்த சில குடும்பங்களே இவை.

இந்த குடும்பங்கள் எவையும் ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்தவர்கள் இல்லை .மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச செயலக பிரிவில் உள்ள அருகம் குண்று கிராமத்தை சேர்ந்தவர்களே இவர்கள்.

வறுமை இவர்களுக்கு பழக்கமே. வறுமையிலும் உழைத்து உயிர் வாழ்ந்தாலும் இந்த ஊரடங்கு இவர்கள் வாழ்கையை உலுக்கி போட்டுள்ளது.

இந்த பகுதியில் உள்ள அனேகமான குடும்பங்கள் கூலித்தொழில் செய்து வாழ்வாதாரத்தை கொண்டு நடத்துகின்றனர். ஊரடங்குச் சட்டம் காரணமாக இவர்களால் கூலித் தொழிலிற்கும் செல்ல முடியவில்லை.

எம்மவர்களில் சமையல் அறை போன்று தான் அவர்களின் வீடு ஓட்டைகள் நிறைந்த ஓலைக் குடிசை புகை மண்டலம் நிறைந்த சமையல் அறை.

தாயின் பாலுக்காய் காத்திருக்கும் கை குழந்தை காலை உணவுக்காக காத்திருக்கும் மற்ற குழந்தைகள் என பல்வேறு  துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

ஒழுங்கான வீடு இல்லை நீர் வசதி இல்லை தொடர்ந்து செய்ய தொழில் இல்லை. தமக்கு என ஒரு தற்காலிக வீடுகளை அமைத்து தாருங்கள் என கோருகின்றனர் இப் பகுதி மக்கள்.

வயதுக்கு வந்த பெண் பிள்ளைகள் இருந்தும் மலசல கூட வசதி இன்றி காடுகளுக்கு செல்லும் நிலை.

இவர்களுக்கான தற்காலிக ஏற்பாட்டையாவது அரச அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

எனவே சம்மந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக குறித்த மக்களின் அடிப்படை தேவைகளை நிறை வேற்றி தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பகிரவும்...