Main Menu

பெண்களின் பாதுகாப்புக்கான சட்டதிருத்த சட்டமூலம் தமிழக சட்டப் பேரவையில் அறிமுகம்

பெண்களின் பாதுகாப்பிற்கான சட்டதிருத்த சட்டமூலத்தினை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப் பேரவையில் முன்வைத்துள்ளார்
ஏற்கெனவே இத்தகைய குற்றங்களுக்கு தண்டனைகள் வரையறுக்கப்பட்டிருந்தாலும், இத்தண்டனைகளை மேலும் கடுமையாக்க வேண்டிய அவசியம் உள்ளதாக மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருவதாக கூறினார்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு அரசு ஒருபோதும் பின்வாங்காது என்றும் மு.க ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து உறுப்பினர்களும் இந்த சட்ட திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
10 திருத்தங்களை ஸ்டாலின் முன்வைத்துள்ளார்
அதன்படி பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுவோருக்கு முன்னதாக குறைந்தது 10 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டது
தற்போது 14 ஆண்டுகள் வழங்கப்பட வேண்டும் என சட்ட திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
நெருங்கிய உறவினர் அல்லது காவல்துறை ஊழியர் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டால் முன்னதாக குறைந்தது 10 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டது
தற்போது 20 ஆண்டுகள் வழங்கப்பட வேண்டும் என சட்ட திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
இதேநேரம் 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தினால் 20 ஆண்டுகள் கடூழிய சிறைதண்டனை அல்லது மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை ஆகியன வழங்கப்பட்டன
தற்போது ஆயுள் அல்லது மரண தண்டனை விதிக்க வேண்டும் என சட்ட திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
பாலியல் வன்புணர்ச்சி மற்றும் மரணத்தை விளைவிக்கும் குற்றத்திற்கு முன்னதாக குறைந்தது 20 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டது
தற்போது அந்தக் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என சட்ட திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
இதனிடையே கூட்டுப் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்ட குற்றத்திற்கு முன்னதாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது
தற்போது மரண தண்டனை விதிக்க வேண்டும் என சட்ட திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீண்டும் மீண்டும் குற்றத்தை மேற்கொள்பவர்களுக்கு ஆயுள் தண்டணை வழங்கப்பட்டது , தற்போது அதற்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது.
பாலியல் தொல்லை குற்றத்திற்கு விதிக்கப்படும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையை 5 ஆண்டுகளாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது
அசிட் எனப்படும் அபாயகர திரவத்தை வீசிய குற்றத்திற்கும் வீச முயற்சித்த குற்றத்துக்கும் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை அல்லது 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது

பகிரவும்...
0Shares