Main Menu

கிளிநொச்சி மாவட்டத்தில் உடனடி மாற்றங்களை ஏற்படுத்தித் தருமாறு தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை ஜனாதிபதிக்கு கடிதம்

கிளிநொச்சி மாவட்டத்தில் உடனடி மாற்றங்களை ஏற்படுத்தித் தருமாறு தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் ச.ஸ்டீவென்சன் (கீதன்) இக்கடிதத்தை அனுப்பிய பின்னர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

கிளிநொச்சி மாவட்டம் யுத்தத்தினால் நலிவடைந்து வளர்ந்துவரும் மாவட்டம் என்பது தாங்கள் அறிந்ததே. இம்மாவட்டத்தின் நகர அபிவிருத்தியில் உடனடியாக செய்து கொடுக்கவேண்டிய விடயங்களை தங்களிடம் முன்வைக்கிறோம்.

1. கிளிநொச்சியில் பரந்தன் சந்தி, டிப்போ சந்தி, கரடிபோக்கு சந்தி, காக்காக்கடைச்சந்தி மற்றும் வைத்தியசாலை முன்பாக மின்விளக்குச் சமிக்ஞை அமைக்கவேண்டிய தேவையுள்ளது.

2. பரந்தன் முதல் பல்கலைக்கழக சந்தி வரை இருவழிப் பாதையை அமைக்கவேண்டிய தேவை உள்ளது.

3. நகர்ப் பகுதிகளில் உள்ள பாதசாரி கடவைகளில் தெரு விளக்குகளை அமைத்துத் தரவேண்டியுள்ளது.

4. பரந்தன் முதல் பல்கலைக்கழக சந்தி வரை தெரு விளக்குகளை A9 வீதியில் அமைத்துத் தரவேண்டிய தேவையுள்ளது.

5. கிளிநொச்சி நகரில் சுற்றுவட்டம் ஒன்றை அமைத்து, மணிக்கூடு கோபுரம் ஒன்றையும் அமைத்து நகர வசதிகளை ஏற்படுத்தி தாருங்கள்.

மேற்படி விடயங்களை மேற்கொண்டு தருவதன் மூலம் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை தவிர்க்க முடியும் என எதிர்பார்த்து இந்த கோரிக்கை விடுக்கிறோம்.

பொருத்தமான நடவடிக்கை எடுத்து, மாவட்டத்தில் மேலதிக அபிவிருத்திகளை செய்ய நடவடிக்கை எடுத்து உதவுமாறு கோருகின்றோம் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிரவும்...
0Shares