Main Menu

Online கடன் செயலியால் மேலும் ஒரு உயிர்ப்பலி- சென்னை வாலிபர் தற்கொலை

ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் கடன் பெற்றவர்கள் அதனை திருப்பிச் செலுத்தாவிட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பணத்தை வசூலிக்க பல்வேறு யுக்திகளை கையாள்கின்றன. குறிப்பாக, கடன் பெற்றவர்களை அவமானப்படுத்தி அவர்களை கூனிக் குறுகச் செய்வதன் மூலம் பணத்தை விரைவாக வசூலிக்கின்றனர். இவ்வாறு செய்யும்போது சிலர் அவமானம் தாங்காமல் உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலைக்கு செல்கின்றனர். அவ்வகையில் சென்னையில் இன்று ஒருவர் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். தனியார் ஓட்டலில் பணியாற்றிய இவர், ஆன்லைன் கடன் செயலி மூலம் கடன் பெற்றுள்ளார். குறிப்பிட்ட காலத்தில் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் அவரது புகைப்படங்களை ஆன்லைன் செயலி நிறுவனத்தினர் ஆபாசமாக சித்தரித்து, அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி உள்ளனர். இதனால் மனமுடைந்த பாண்டியன் இன்று தூக்கு போட்டு இறந்துள்ளார். இதுகுறித்து சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆன்லைன் செயலிகள் மூலம் கடன் பெற வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இருப்பினும் வங்கிகளின் உள்ள நடைமுறைகளை விட ஆன்லைனில் விரைவாக கடன் கிடைப்பதால் பலர் ஆன்லைன் செயலிகளையே நாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...