பயங்கரவாத ஆதரவு நாடுகள் பட்டியலிலிருந்து சிரியா நீக்கம்
பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்க வெளியுறவுத் துறை நீக்கியுள்ளது.
பஷார் அல்-அசாத்துக்கு பிந்தைய அரசாங்கத்திற்குத் தடைகளிலிருந்து நிவாரணம் அளிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்த நடவடிக்கை வந்துள்ளது.
அமெரிக்க திறைசேரி திணைக்களத்தின் வெளிநாட்டுச் சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகமானது, சிரியா இனி பயங்கரவாதப் பட்டியல் அரசாங்கத் தடைகள் ஒழுங்குமுறைகளின் கீழ் உள்ள தடைகளுக்கு உட்பட்டதல்ல என்று கூறியுள்ளது.
1979-ஆம் ஆண்டு முதல் சிரியா இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தது; கியூபா, வட கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் மட்டுமே இத்தகைய நிலையை முன்பு கொண்டிருந்தன.
பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டிருந்ததால், பாதுகாப்பு உதவிகள், நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் ஆகியவற்றில் பெரும் தடைகள் நிலவின.
சிரிய உள்நாட்டுப் போரின்போது முன்னாள் ஜனாதிபதியான பஷார் அல்-அசாத்தின் படைகளை எதிர்த்த முக்கிய ஆயுதமேந்திய குழுக்களில் ‘ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்’ (Hay’at Tahrir al-Sham) அமைப்பும் ஒன்றாகும்.
இக்குழுவை ஷாரா (Sharaa) வழிநடத்தினார்; அசாத் பதவியிலிருந்து அகற்றப்பட்ட பிறகு இவர் சிரியாவின் ஜனாதிபதியானார்.
2024 டிசம்பரில் அசாத் ஆட்சியின் வீழ்ச்சி மற்றும் அதனைத் தொடர்ந்து நாட்டை நிலைப்படுத்துவதற்காக ஷாரா மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாகவே இந்தக் கொள்கை மாற்றம் ஏற்பட்டது.
கடந்த நவம்பரில் ஷாரா வெள்ளை மாளிகைக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் ஒன்றை மேற்கொண்டார்.
1946-இல் சிரியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து அந்நாட்டுத் தலைவர் ஒருவர் மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.
இதற்கு முன்னதாக, 2025 மே மாதம் ரியாத்தில் ட்ரம்ப்புடன் ஷாரா ஒரு சந்திப்பை மேற்கொண்டிருந்தார்.
வொஷிங்டன் ‘சீசர்’ (Caesar) பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்குச் சற்று முன்னதாகவே இந்தச் சந்திப்பு நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
