பழங்களை இரசாயனங்கள் மூலம் பழுக்க வைப்பதைத் தடுக்க சட்ட ஏற்பாடுகள்
செயற்கையாகப் பழங்களை பழுக்க வைப்பதற்கு நச்சுத்தன்மை வாய்ந்த இரசாயனங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களைப் பயன்படுத்தி செயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை விற்பனை செய்வது குறித்து, நுகர்வோர் விவகார ஆணையத்திற்கு (CAA) ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
நுகர்வோர் விவகார ஆணையத்தின் அதிகாரிகளுடன் பங்கெடுத்த கலந்துரையாடலின் போது அவர் இக்கருத்துகளைத் தெரிவித்தார்.
வாழைப்பழம், மாம்பழம் மற்றும் பப்பாளி போன்ற பழங்களை பழுக்க வைப்பதற்கு நச்சுத்தன்மை வாய்ந்த இரசாயனங்களைப் பயன்படுத்துவது பொதுமக்களிடையே தீவிர கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அத்தகைய இரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்படும் இடங்களில் அதிகாரிகள் சோதனைகளை மேற்கொள்வார்கள்.
விதிமுறைகள் குறித்துத் தெரிவிக்கப்பட்ட பின்னரும் வர்த்தகர்கள் இச்செயலைத் தொடர்ந்து மேற்கொண்டால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் இதன்போது எச்சரித்தார்.
