நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை இன்று கையளிக்க திட்டம்
பாராளுமன்றம் இன்று (21) மீண்டும் கூடவுள்ளது.
சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று முற்பகல் 09.30 மணிக்குபாராளுமன்றம் கூடவுள்ளதாக பாராளுமன்றப் பொதுச்செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் 119 மற்றும் 120 இன் கீழ் இரண்டு தீர்மானங்களை அங்கீகரிப்பதற்காக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை விசேட பிரேரணையாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ள இலங்கையர்களுக்கு முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் திட்டம் தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய (COPA) நடத்திய விசாரணை அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைப்பது தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளது.
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (COPE) விசாரணைகளின் போது வெளிப்படுத்திய தகவல்கள் தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைப்பது தொடர்பிலும் இன்று விவாதம் நடைபெறவுள்ளது.
அன்றைய தினம் பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை பொது மனுக்கள் பற்றிய குழுவின் செயற்பாடுகள் குறித்த சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதனிடையே, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை இன்றைய தினம் சபாநாயகரிடம் கையளிப்பதற்கு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சியின் அனைத்துக் கட்சிகளும் இணைந்து குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்க்கட்சியின் அனைத்துக் கட்சிகளும் இணைந்து நடத்தும் விசேட கலந்துரையாடல் ஒன்று நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
