வரி ஏய்ப்பு செய்தால் சிறை நிச்சயம்! விடுக்கப்பட்ட இறுதி எச்சரிக்கை
குறிப்பிட்ட வருமான வரிப் பொறுப்புகளைத் திட்டமிட்டு நிறைவேற்றத் தவறும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராகக் குற்றவியல் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2026ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க உள்நாட்டு வருவாய் திருத்தச் சட்டத்தின் மூலம், அதற்கான அதிகாரம் உள்நாட்டு இறைவரித் ஆணையாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
வருமான வரிச் செயற்பாடுகளுக்காகப் பதிவு செய்யாமை, வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிக்காமை, மூலப்பக்க வரி மற்றும் முன்கூட்டிய தனிநபர் வருமான வரி வருடாந்தக் கூற்றுக்களைச் சமர்ப்பிக்காமை ஆகிய காரணங்களுக்காக இவ்வாறு வழக்குத் தொடர முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், வழக்குத் தொடர்வது என்பது இறுதி விருப்பத் தேர்வாகவே பயன்படுத்தப்படும் என்றும், அதற்கு முன்னர் சில சட்டபூர்வமான நடைமுறைகள் பின்பற்றப்படும் என்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
அதன்படி, வழக்குத் தொடருவதற்கு முன்னர் அது குறித்து அறிவித்து ஓர் அறிவித்தல் விடுக்கப்படும் என்றும், அதற்காக 30 நாட்கள் சலுகைக் காலம் வழங்கப்படும் என்றும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அந்தத் தேவையைப் பூர்த்தி செய்யாவிடின், அது சட்டபூர்வமான குற்றமாகக் கருதப்பட்டு, அதற்கமைய நீதவான் நீதிமன்றில் வழக்குத் தொடர முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏதேனும் ஒரு வகையில் குறித்த குற்றச்சாட்டிற்கு குற்றவாளியாகக் காணப்பட்டால், 4 இலட்சம் ரூபாய்க்கு மிகாத அபராதம், 06 மாதங்களுக்கு மிகாத சிறைத்தண்டனை அல்லது இவ்விரு தண்டனைகளையும் விதிக்க முடியும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தத் திட்டம் திட்டமிட்டு வரி ஏய்ப்பு செய்யும் நபர்களை இலக்கு வைப்பதற்காக மட்டுமே என்றும், ஒத்துழைப்புடன் செயற்படும் நபர்களைத் தண்டிப்பது இதன் நோக்கம் அல்ல என்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மேலும் தெரிவித்துளளது.
