அமெரிக்காவின் கடற்படை முற்றுகைக்கு ஈரான் பதிலடி: உலகளாவிய முக்கிய கடல் வழித்தடங்களை முடக்க ஈரான் மிரட்டல்!
அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்குப் பயனளிக்கும் அனைத்து முக்கிய ஏற்றுமதி கடல் வழித்தடங்களையும் மூடப்போவதாக ஈரானின் ‘இஸ்லாமிய புரட்சிகர காவல் படை’ எச்சரித்துள்ளது.
ஈரான் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்முஸ் ஜலசந்தியை மூடியதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானிய துறைமுகங்கள் மீதான புதிய கடற்படை முற்றுகைக்கு உத்தரவிட்டார்.
இதற்குப் பதிலடியாகவே ஈரான் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ‘IRNA’ இன்று வெளியிட்ட அறிக்கையில், இதனை கோரியுள்ளது.
அதன்படி, “இந்த பிராந்தியத்தின் எரிசக்தி ஏற்றுமதி என்பது ஒன்று அனைவருக்கும் சமமாகப் பகிரப்பட வேண்டும், அல்லது எவருக்கும் கிடைக்காமல் மறுக்கப்பட வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் இந்த அறிவிப்பானது, உலக நாடுகளுக்குச் செல்லும் கச்சா எண்ணெய் விநியோகத்தை முழுமையாக முடக்கும் ஒரு சவாலாகப் பார்க்கப்படுகிறது.
ஈரான் தனது நட்பு அமைப்பான ஏமனின் ‘ஹூதி’ (Houthi) கிளர்ச்சியாளர்களைப் பயன்படுத்தி, செங்கடலின் நுழைவாயிலான ‘பாப் எல்-மண்டேப்’ (Bab el-Mandeb) ஜலசந்தியை மூடத் திட்டமிட்டுள்ளதாகப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இது நடந்தால், உலகின் மிக முக்கியமான இரண்டு எரிசக்தி விநியோகப் பாதைகளும் ஒரே நேரத்தில் முடக்கப்படும் அபாயம் ஏற்படும்.
சவூதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதி மற்றும் உலகளாவிய கப்பல் போக்குவரத்தின் பெரும்பகுதி இந்த பாப் எல்-மண்டேப் ஜலசந்தி வழியாகவே பயணிக்கிறது.
சவூதி அரேபியா ஏமன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், பாப் எல்-மண்டேப் ஜலசந்தியை மூடத் தாங்கள் தயாராக இருப்பதாக ஹூதி அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.
இந்த நடவடிக்கையால் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 200 டாலராக உயரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
