Main Menu

மல்வானை ‘பசில் ராஜபக்ச’ மாளிகையைச் சுற்றிவளைத்து மாணவர்கள் போராட்டம்

மல்வானை பகுதியில் அமைந்துள்ள, உரிமையாளர் எவருமற்ற சொத்து என அடையாளம் காணப்பட்டுள்ள காணி மற்றும் வீட்டினை பல்கலைக்கழகங்களின் கல்வித் தேவைகளுக்காகவும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகவும் கையளிக்குமாறு கோரி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று (14) பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்தது.

குறித்த வீட்டைச் சுற்றிவளைத்துப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், தற்போதைய அரசாங்கம் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதியைச் சுட்டிக்காட்டினர்.

“மக்களிடமிருந்து திருடப்பட்ட சொத்துக்களை மீண்டும் மக்களிடமே ஒப்படைப்போம்” என்ற வாக்குறுதிக்கு இணங்க, இடவசதி குறைவாக உள்ள பல்கலைக்கழகங்களின் பயன்பாட்டிற்கு இந்தச் சொத்தை வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த வீட்டிற்கும், தமக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நீதிமன்றத்தில் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து: இச்சொத்து நீதியமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது.
பின்னர், இதனை ஏலத்தில் விற்பனை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த ‘அரகலய’ போராட்டத்தின் போது ஒரு குழுவினரால் இந்த வீடு தீ வைக்கப்பட்டு, ஒரு பகுதி சேதமடைந்திருந்தது.

ஆரம்பத்தில் இங்கு சர்வதேச நீதிபதிகள் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், அந்தத் திட்டம் நீண்ட காலமாக நடைமுறைப்படுத்தப்படாமல் காணி பாழடைந்த நிலையில் காணப்படுகிறது.

இந்தச் சூழலிலேயே, வீணாகக் கிடக்கும் இந்தச் சொத்தை மாணவர்களின் கல்வி மற்றும் பொது நலச் சேவைகளுக்காகப் பயன்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.