Main Menu

மனைவிக்கு கடன் – விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

தனது வேட்புமனுவில் மனைவிக்கு ரூ.12 கோடியே 60 லட்சம் ரூபாய் கடன் கொடுத்ததாக தவெக தலைவர் விஜய் குறிப்பிட்டுள்ளது குறித்து ஆய்வு செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் 100 கோடி ரூபாய் வித்தியாசம் உள்ளது குறித்து வருமான வரித்துறை விசாரிக்கக் கோரி பெரம்பூர் தொகுதி வாக்காளர் தாக்கல் செய்த வழக்கு, ஜூன் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேட்புமனுவில் பெருந்தொகையை மனைவி உள்ளிட்டோருக்கு கடனாக வழங்கியுள்ளதாக, விஜய் தனது வேட்புமனுவில் கூறியுள்ளது குறித்து ஆய்வு செய்யக் கோரி, மற்றொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பெரம்பூர் தொகுதி வாக்காளர் வெங்கடேஷ் தாக்கல் செய்த மனுவில், விவாகரத்து கோரி தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில், வேசட்புமனுவில் அவருக்கு 12 கோடியே 60 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளதாக கூறியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வேட்புமனுவில் சொத்து விவரங்களை தெரிவிப்பது வெறும் சடங்கு அல்ல. அதில் உண்மை விவரங்களை மறைப்பது தேர்தல் நடைமுறையை மோசடி செய்வதை போன்றது எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. தனியார் கல்வி அறக்கட்டளைக்கு 20 கோடி ரூபாய் பணம் வழங்கியுள்ளது குறித்து வேட்புமனுவில் முறையாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, ஏற்கனவே இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க முடியாது எனக் கூறி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.