அரசாங்கத்திற்கு எதிராக முஜிபுர் CIDயில் முறைப்பாடு
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் இன்று (13) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளனர்.
நிலக்கரிக்கான விலை மனு கோரலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துமாறு கோரியே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த விலை மனுவை ஜனாதிபதிக்கு நெருக்கமான ஒருவருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட விதம் தொடர்பான குரல் பதிவு ஒன்று வெளியாகியுள்ளதாகத் தெரிவித்து, இந்த முறைப்பாட்டை அவர்கள் சமர்ப்பித்துள்ளனர்.
இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கருத்து தெரிவிக்கையில்,
ஒரு குரல் பதிவு வெளியாகியுள்ளது. அதைக் கேட்கும்போது அங்கேயும் ஒரு மோசடி நடந்துள்ளது என்பது புரிகிறது. ஜனாதிபதிக்கு மிக நெருக்கமான ஒருவருக்கு இந்த டெண்டரை வழங்க வேண்டும் என்பது தொடர்பான கலந்துரையாடல் அந்த குரல் பதிவில் உள்ளது.
எனவே, அந்த குரல் பதிவு மற்றும் அதில் இடம்பெற்றுள்ள விடயங்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு கோரி இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளோம்.
அந்த குரல் பதிவில் ஜனாதிபதியின் பெயர் மற்றும் அவருக்கு மிக நெருக்கமான தொழிலதிபர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன.
இதன் மூலம் அங்கேயும் தெளிவாக ஒரு மோசடி நடந்துள்ளது என்பது உறுதியாகிறது.
