Main Menu

நிலவும் கடும் வெப்பம் – செல்லப் பிராணிகளுக்கு உயிராபத்து

தற்போது நிலவும் கடும் வெப்பம், வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு உயிராபத்தை ஏற்படுத்தக்கூடும் என கால்நடை வைத்தியர் சோபாத் விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று (01) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், குறிப்பாக கருப்பு நிற நாய்கள் மற்றும் பூனைகளுக்கு இந்த கடும் வெப்பம் உயிருக்கு ஆபத்தாக முடியலாம் எனக் குறிப்பிட்டார்.

அதிக வெப்பத்தினால் விலங்குகளின் உடல் வெப்பநிலை அதிகரித்து, அதனை கட்டுப்படுத்த முடியாமல் போவதால் அவை இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அவர் விளக்கினார்.

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களுக்குள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் செல்லப்பிராணிகளை விட்டுச் செல்ல வேண்டாம் என்றும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

இந்த நாட்களில் நிலவும் கடும் வெப்பம் வெவ்வேறு விலங்குகளை வெவ்வேறு விதமாகப் பாதிக்கிறது. குறிப்பாக வீட்டில் வளர்க்கப்படும் பூனைகள், நாய்கள், பண்ணை விலங்குகள் மற்றும் பறவைகளை இது பாதிக்கும் விதம் மாறுபட்டது.

பூனைகளைப் பொறுத்தவரை, மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரையிலான காலப்பகுதியில் அவற்றை வெளியே அழைத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

அதேபோல், பிராணிகளை வாகனத்திற்குள் வைத்துவிட்டு பொருட் கொள்வனவுக்கு செல்வது மிகவும் தவறான செயலாகும். குறிப்பாக கருப்பு நிற நாய்களை நாம் அழைத்துச் செல்லவே கூடாது.

காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணிநேரம் வாகனத்தில் பயணித்தால் கூட, பிராணி நோய்வாய்ப்பட்டு உடல் வெப்பநிலை கட்டுப்பாடின்றி அதிகரித்து உயிரிழக்க நேரிடும்.

விலங்குகள் நாக்கை வெளியே தள்ளி மூச்சு வாங்குவதை நாம் அவதானிக்கலாம். பூனைகளும் அவ்வாறே செய்யும். இவ்வாறான நிலையில், உடனடியாக ஐஸ் கட்டிகளை வழங்குங்கள், உடலை நனையுங்கள் அல்லது கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். இல்லையெனில் பிராணியைக் காப்பாற்றுவது கடினமாகிவிடும்.

மேலும், செல்லப்பிராணிகள் இருக்கும் கூடுகள் வெப்பத்தினால் சூடாகியிருக்கலாம். எனவே, கூரையை மறைப்பதன் மூலம் வெப்பத்தைக் குறைக்கலாம். குறிப்பாக Rottweiler போன்ற 40 கிலோவிற்கும் அதிக எடையுள்ள நாய்களை நிச்சயமாக வெயிலில் வைக்க வேண்டாம்.

பகல் நேரங்களில் நாய்களுக்கு முகக்கவசம் அணிவிப்பதைத் தவிர்க்கவும். நாய் இருக்கும் இடத்தில் எப்போதும் தண்ணீர் இருப்பதை உறுதிப்படுத்துங்கள், தண்ணீரில் ஐஸ் கட்டிகளைப் போடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.