ஸ்கொட்லாந்தில் தீவிரமடையும் தேர்தல் பிரச்சாரம் – தனிநாட்டுக் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தும் ஆளுங் கட்சி
ஸ்கொட்லாந்தில் எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளதுடன், முக்கிய அரசியல் கட்சிகள் வாக்காளர்களை ஈர்க்க பல்வேறு வாக்குறுதிகள் மற்றும் கொள்கைகளை முன்வைத்துள்ளன.
இந்தத் தேர்தலில் பிரிவினைவாதக் கருத்துகளும் மேலோங்கியுள்ளன. பிரித்தானியாவிடமிருந்து உரிய வகையில் நிதி மற்றும் ஏனைய விடயங்களை பகிர்ந்தளிப்பதில் பாரபட்சம் காட்டப்படுவதாக நேரடிக் குற்றச்சாட்டுகளை தற்போதைய ஆளும் ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி முன்வைத்துள்ளது.
மத்திய கிழக்கு போர் காரணமாக ஸ்கொட்லாந்து எரிசக்தி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள போதிலும் அதற்கு உரிய தீர்வுகளை வழங்க பிரித்தானிய பிரதமர் ஸ்டார்டர் நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குற்றச்சாட்டுகளையும் ஆளும் கட்சி முன்வைத்துள்ளது.
பிரித்தானியாவிலிருந்து பிரிந்து ஸ்கொட்லாந்து சுதந்திர நாடாக மலர வேண்டும் என்ற கருத்தை ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருவதுடன், இந்தத் தேர்தலிலும் அந்தக் கருத்தை ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி முன்வைத்துள்ளது.
ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி, தொழில் கட்சி, கன்சர்வேட்டி கட்சிகள் இந்தத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதுடன், Reform UK கட்சியும் போட்டியிடுகிறது. மக்கள் மத்தியில் Reform UK கட்சிக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளதால் Reform UK கட்சிக்கும் ஸ்கொட்லாந்து தேசியக் கட்சிக்கும் இடையில் போட்டி தீவிரமடைந்துள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
என்றாலும், எல்லைக் கட்டுப்பாடுகளை வலுப்படுத்த வேண்டும் என்ற Reform UK கட்சியின் நிலைப்பாடு ஸ்கொட்லாந்து மக்களின் சுயாதீனத்துக்கு எதிராக அமையும் என்ற கருத்தை ஆளும் ஸ்கொட்லாந்து கட்சி வலுவாக மக்கள் மத்தியில் முன்வைப்பதால் மீண்டும் ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி ஆட்சியை கைப்பற்ற வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
குடியேற்றக் கொள்கை, பொருளாதாரம் மற்றும் சுயாட்சி போன்ற முக்கிய பிரச்சினைகள் மையமாக கொண்டு ஸ்கொட்லாந்தின் தேர்தலில் கட்சிகளின் பிரசாரம் மிகவும் தீவிரமாகியுள்ளது.
