Main Menu

பிலிப்பைன்ஸ் IRRI அரிசி ஆய்வு நிறுவனம்: பிரதமர் கலாநிதி ஹரிணி நேரில் பார்வை

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் பிலிப்பைன்ஸிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இன்று (11) பிலிப்பைன்ஸின் லொஸ் பானோஸில் (Los Baños) அமைந்துள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் ((IRRI)  தலைமையகத்தைப் பார்வையிட்டார்.

இதன்போது, அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி யுவோன் பின்டோவை (Yvonne Pinto) சந்தித்த பிரதமர், இலங்கையின் நெற்பயிர்ச்செய்கை மற்றும் விவசாயத்துறையின் நிலையான அபிவிருத்திக்காக இரு தரப்பினருக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுத்தார்.

இலங்கை நெல் விவசாயிகள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக நெல் உற்பத்தியில் காணப்படுகின்ற தடைகள், காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் மற்றும் விவசாயிகளை நவீன தொழில்நுட்ப முறைகளுக்கு இட்டுச் செல்ல வேண்டியதன் அவசியம் குறித்துப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் நெல் விளைச்சலை அதிகரிப்பதற்கும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் தேவையான நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் ஆராய்ச்சிப் பங்களிப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது. அதற்கமைய காலநிலை மாற்றங்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய புதிய நெல் வகைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் நிலையான விவசாய முறைகளை ஊக்குவித்தல் போன்ற விடயங்களில் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம்  கொண்டுள்ள உலகளாவிய ஆராய்ச்சி அனுபவங்களை இலங்கையுடன் பகிர்ந்துகொள்ள இணக்கம் காணப்பட்டது.

அத்தோடு, இலங்கையின் விவசாய நிறுவனங்களின் கொள்ளளவை மேம்படுத்துதல், ஆராய்ச்சிப் கூட்டாண்மைகளை உருவாக்குதல் மற்றும் அறிவுப் பரிமாற்றத் திட்டங்களை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் இரு தரப்பினரதும் கவனம் செலுத்தப்பட்டது.

விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட விவசாயப் புத்தாக்கங்கள் மூலம் இலங்கையின் விவசாய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், தேசிய உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் இந்த சர்வதேச ஒத்துழைப்பு பெரிதும் உதவும் என இதன்போது பிரதமர் மேலும் தெரிவித்தார்.