“சிறையில் சித்திரவதை ; என் உயிருக்கு ஆபத்து ; இராணுவ தளபதி அசிம் முனீர் மனநிலை சரியில்லாதவர்” – இம்ரான் கான் பகிரங்கம்
பாகிஸ்தான் சிறைச்சாலையில் தான் சித்திரவதை செய்யப்படுவதாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அதில் “என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. எனக்கு எதிராக பாகிஸ்தான் இராணுவம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது” என குறிப்பிட்டுள்ளமை அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் ராவல் பிண்டியில் உள்ள அடியாலா சிறைச்சாலையில் 2 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானை சந்திக்க அவரது சகோதரிகளுக்கு அண்மையில் சிறையில் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
அதனையடுத்து, இம்ரான் கான் சிறையில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக பல தகவல்கள் சமூக ஊடக தளங்களில் பரவின.
அதனைத் தொடர்ந்து, சிறை வளாகத்திலும் அந்நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்தன.
அதன் பின்னர், இம்ரான் கானை சந்திக்க அவரது சகோதரி உஸ்மாவுக்கு சிறைச்சாலை நிர்வாகம் அனுமதியளித்தது.
உஸ்மா சிறையில் இம்ரான் கானை சந்தித்துவிட்டு, வெளியே வந்து, “இம்ரான்கான் நலமுடன் உள்ளார். ஆனால், அவருக்கு மன ரீதியான துன்புறுத்தல் அளிக்கப்படுகிறது” என தெரிவித்தார்.
சகோதரியை சந்தித்த பின்னர், இம்ரான் கான் அளித்த அறிக்கையினை அவரது தெக்ரிக் இ இன்சாப் கட்சி வெளியிட்டது.
அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டதாவது:
“எனக்கு எதிராக பாகிஸ்தான் இராணுவம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது. அவர்களுக்கு தற்போது என்னைக் கொலை செய்வதுதான் பாக்கி இருக்கிறது. எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதியைப் போன்ற சூழ்நிலையில் நான் அடைக்கப்பட்டுள்ளேன். எனக்கு ஏதாவது நடந்தால், இராணுவத் தலைவரும், உளவுப்பிரிவு டி.ஜியும் பொறுப்பாவார்கள்.
நான் ஒரு கூண்டில் அடைக்கப்பட்டு விலங்குகளை விட மோசமாக நடத்தப்பட்டேன். 5 நாட்கள் என் அறைக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 10 நாட்கள் நான் அறையில் அடைக்கப்பட்டேன். இங்குள்ள நிலைமைகள் மனிதாபிமானம் அற்றவைகளாக உள்ளன.
இராணுவ தளபதி அசிம் முனீர் வரலாற்றில் மிகவும் கொடுங்கோல் சர்வாதிகாரி. மனநிலை சரியில்லாதவர். எனக்கு அளிக்கப்படும் சித்ரவதைக்கு அசிம் முனீர் தான் காரணம்” என இம்ரான் கான் குறிப்பிட்டிருந்தார்.
பகிரவும்...