இந்திய சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் யாழ்ப்பாணத்திற்கு வர வேண்டும் – நடிகர் தலைவாசல் விஜய்

யாழ்ப்பாணம் ஒரு பீனிக்ஸ். யாழ்பாணத்திற்கு சுற்றுலா பயணிகள் வர வேண்டும். குறிப்பாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா பயணிகள் வருவோர் நிச்சயமாக யாழ்ப்பாணத்தை வந்து பார்வையிட்டு செல்ல வேண்டும் என தென்னிந்திய நடிகர் தலைவாசல் விஜய் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் கர்மா திரைப்பட படப்பிடிப்புக்காக யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள தலைவாசல் விஜய் ஞாயிற்றுக்கிழமை(19) யாழ் . ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பொன்றினை நடாத்தி இருந்தார்.
குறித்த ஊடக சந்திப்பின் போதே இதனை அவர் தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்திற்கு வருகை தருவது இது மூன்றாவது தடவை. இறுதியாக 08 ஆண்டுகளுக்கு முன்னர் வருகை தந்திருந்தேன். அப்போது பார்த்த யாழ்ப்பாணத்திற்கும் தற்போதுள்ளதுக்கும் நிறையவே வேறுபாடுகள் காணப்படுகிறது.
அன்பான மக்கள் , அருமையான உணவுகள் , மிக முக்கியமாக நகரம் மிக தூய்மையாக காணப்படுகிறது.
இலங்கைக்கு சுற்றுலா வருவோர் நிச்சயம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தர வேண்டும். குறிப்பாக இந்தியாவில் இருந்து வருவோர் யாழ்ப்பாணத்தற்கு வருகை தர வேண்டும்.
சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமானம் உள்ளது. யாழ்ப்பாணம் வந்து, இங்கே பார்வையிட வேண்டிய இடங்களை பார்வையிட்டுக்கொண்டு , தென்னிலங்கை சென்று அங்கும் பார்வையிட்ட பின்னர் கொழும்பில் இருந்து சென்னை திரும்ப கூடிய மாதிரியோ, அல்லது கொழும்பு ஊடாக வருகை தந்து யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னை திரும்ப கூடியவாறு தமது பயண ஒழுங்குகளை மேற்கொள்ள முடியும்.
நான் மீண்டும் எனது குடும்பத்துடன் யாழ்ப்பாணம் வரவேண்டும் என திட்டமிட்டுள்ளேன்.
நான் இம்முறை யாழ்ப்பாணம் வருகை தந்தது யாழ்ப்பாண இளைஞர்களின் முயற்சியில் உருவாகும் கர்மா எனும் படத்தில் நடிப்பதற்காக வந்த எனக்கு அருமையான வரவேற்பு கிடைத்தது.
நான் இங்கு யாழ்ப்பாண தமிழ் பேசி நடிப்பதில் மிக கஷ்டப்பட்டேன். யாழ்ப்பாண தமிழ் மிக அழகானது. அதனை பேசி நடித்ததில் மகிழ்ச்சி.
இங்குள்ள கலைஞர்கள் திறமையானவர்கள். அவர்களிடம் தொழில் நேர்த்தியை பார்த்தேன். நிச்சயம் அவர்கள் ஒரு இடத்திற்கு செல்வார்கள் தங்கள் திறமையை அவர்கள் மென்மேலும் வளர்த்துக்கொள்வார்கள் என தென்னிந்திய நடிகர் தலைவாசல் விஜய் தெரிவித்துள்ளார்.
பகிரவும்...