Main Menu

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரிடம் 13ஆம் திருத்தம் பற்றிய சரியான கருத்தில்லை – சுரேஷ் பிரேமச்சந்திரன்

மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதில் தாங்கள் போட்டியிடுவோம் என கூறுகின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர், பிறகு 13ஆம் திருத்தச் சட்டத்தை அடியோடு மறுக்கிறோம் என்கின்றனர். அதனால் அவர்களுக்கு அது தொடர்பில் சரியான கருத்து இல்லை என்பதே உண்மை என  ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அவரது இல்லத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

சுவிற்ஸர்லாந்தில் இடம்பெற்ற சமஸ்டி தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்ட போது சுவிஸ் அரசாங்கம் சமஸ்டித் தீர்வினை தமிழ் மக்களுக்கு வழங்க இருப்பது போன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தன்னுடைய கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.

ஆனால் உண்மை அதுவல்ல. அங்கே பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் தலைவர்களை சுவிஸ் அரசாங்கம் அழைத்தது சமஸ்டி தொடர்பான ஒரு கற்பிதத்தை வழங்குவதற்கு மாத்திரமே தவிர வேறு எதற்கும் அல்ல.

அங்கு அதிகம் வந்தவர்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை சேர்ந்தவர்கள். எனவே அவர்கள் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் முன்வைக்கப்பட்ட யாப்பு சீர்திருத்தம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விடயங்களை முன்கொண்டு செல்வதாக தெரிவித்தார்கள்.

ஆனால் அது தொடர்பான எவ்வித நடவடிக்கைகளையும் இதுவரை அவர்கள் முன்னெடுக்கவில்லை. எனவே, இதனை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

அத்துடன் 13ஆம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி எமக்கு கிடைக்கின்ற குறைந்தபட்ச அதிகாரமான மாகாண சபை தேர்தலை நடத்தி அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.  அதனால் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். நாங்கள் அதிலே போட்டியிடுவோம்.

தேர்தல் தொடர்பில் பேசப்பட வேண்டும் என்று கூறுகிற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் 13ஆம் திருத்தச் சட்டம் தேவை இல்லை என கூறி வருகின்றனர். எனவே இது தொடர்பில் அவர்களுக்கு சரியான கருத்துக்கள் இல்லை என்றார்.

பகிரவும்...
0Shares