ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ; இலங்கை தொடர்பான பிரேரணை வாக்கெடுப்பை கோர அரசாங்கத்துக்கு முதுகெலும்பு இல்லையா – நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் இலங்கை விவகாரத்தில் வாய்மூலம் எதிர்ப்பு தெரிவித்த போதும் வாக்கெடுப்பை கோரவில்லை. வாக்கெடுப்பை கோருவதற்கு அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இல்லையா? பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக உள்ளன. யாரை நீங்கள் மகிழ்விக்கப் போகின்றீர்கள். தமிழ் புலம்பெயர் அமைப்புக்களையா, அல்லது விடுதலைப் புலி ஆதரவாளர்களையா ? ஐ.நா.விவகாரத்தில் இரட்டை வேடம் அணிவதை அரசாங்கம் தவிர்க்க வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) நடைபெற்ற அமர்வின் போது போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சின் 2025 குறைநிரப்புத் தொகை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
ராஜபக்ஷர்கள் தமது வீடுகளுக்கு செல்வதற்காகவே அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணிப்பதாக குற்றஞ்சாட்டியவர்கள் இன்று ஆட்சியில் உள்ளார்கள். அரசாங்கம் அதிவேக வீதி கட்டமைப்பை அமைக்க வேண்டும் என்ற நிலைக்கு வந்துள்ளது.அதிவேக வீதியை அமைத்தால் நாய்கள்,விலங்குகளுக்கு வீதியை கடக்க முடியாத நிலைமை ஏற்படும் என்றே அன்று கூறினீர்கள். இந்த வீதிகள் தங்கத்திலா நிர்மானிக்கப்படுகின்றது என்றும் கேட்டீர்கள்.
ஆனால் இப்போது உங்களின் தலைவர் எஞ்சியுள்ள அதிவேக வீதியை அமைக்க நடவடிக்கை எடுக்கின்றார். அன்று நீங்கள் தடைகளை ஏற்படுத்தியிருக்காவிட்டால் இப்போது ஜனாதிபதிக்கு அதிவேக வீதிகளை திறந்து வைத்திருக்கவும் முடியும்.
அரசாங்கத்தின் முன்னேற்றம் தொடர்பில் கேள்விகள் எழுகின்றன. ஒவ்வொரு அமைச்சும் இதுவரையில் அடைந்துள்ள முன்னேற்றம் என்ன? கடந்த வரவு செலவுத் திட்டத்தில் நிறைவேற்றப்பட்ட நிதியில் எவ்வளவு நிதி செலவிடப்பட்டுள்ளது. மக்கள் அடைந்த நன்மை என்ன என்பதனையும் கூற வேண்டும். கடந்த காலங்கள் தொடர்பில் பேசிக்கொண்டிருக்காமல் வேலைத்திட்டங்கள் பாருங்கள்.
ஒவ்வொரு வாரமும் புது விடயங்கள் பேசப்படுகிறது. இப்போது பொலிஸ் ஆணைக்குழு தொடர்பான பிரச்சினைகள் எழுந்துள்ளன.
அன்று பொலிஸ் ஆணைக்குழு வேண்டும். அது சுயாதீனமாக இருக்க வேண்டும் என்று கூறிய நீங்கள் இப்போது சுயாதீனத்துவத்தை நீக்கி அதன் அதிகாரத்தை பொலிஸ்மா அதிபருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கின்றீர்கள். இப்போது மிருகக்காட்சி சாலையிலும் விலங்குகள் திருடப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
நீங்கள் கடற்படைத் தளபதியை கைது செய்துள்ளீர்கள். விடுதலைப்புலி புலனாய்வில் இருந்த ஒருவர் வழங்கிய சாட்சிக்கமைய கைது செய்துள்ளீர்கள். குற்றப்புலனாய்வுக்கு ஏற்றவாறு வாக்குமூலங்கள் பதியப்படுகின்றன. இவ்வாறான நிலைமையிலேயே பொலிஸ் ஆணைக்குழுவை நீக்கி பொலிஸ்மா அதிபரின் கீழ் அதிகாரங்களை கொண்டுவந்து அரசாங்கத்தின் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிக்கப்படுகின்றது.
பொலிஸ்மா அதிபர் சில விடயங்களை புரிந்துகொள்ள வேண்டும். அதாவது கடந்த காலங்களில் அரசாங்கத்திற்காக கடைக்கு சென்ற பொலிஸ்மா அதிபர்களுக்கு என்ன நடந்தது என்று சிந்திக்க வேண்டும். பொலிஸாரை பயன்படுத்தி தமது அரசியல் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றிக்கொள்ளவே அரசாங்கம் முயற்சிக்கின்றது.மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை காரியாலயத்தில் எடுக்கும் தீர்மானங்களுக்கு அமைய பொலிஸ் சேவை மாற்றியமைக்க கூடாது.
1980 மற்றும் 1990 ஆம் காலங்களில் இதுபோன்ற நிலைமை இருந்தது. ஆனால் அது தற்போது பொருத்தமாகாது என்பதை குறிப்பிட்டுக்கொள்கிறேன். பொலிஸாரை பயன்படுத்தி அரசியல் செய்ய முடியாது. தயவு செய்து பொலிஸை அரசியல்மயமாக்குவதை நிறுத்துங்கள். பொலிஸ் ஆணைக்குழுவின் கௌரவத்தை சீர்குலைக்க வேண்டாம் என்று கோருகின்றோம்.
இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் இலங்கை விவகாரம் தொடர்பில் வாய்மூலம் எதிர்ப்பு தெரிவித்த போதும் வாக்கெடுப்பை கோரவில்லை. வாக்கெடுப்பை கோருவதற்கு அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இல்லையா? நாடுகள் பல இலங்கைக்கு ஆதரவாக உள்ளன.
யாரை நீங்கள் மகிழ்விக்கப் போகின்றீர்கள்.? புலம்பெயர் தமிழ் அமைப்புக்களையா, அல்லது விடுதலைப் புலி ஆதரவாளர்களையா? .ஐ.நா.விவகாரத்தில் இரட்டை வேடம் அணிவதை அரசாங்கம் தவிர்க்க வேண்டும் என்றார்.
பகிரவும்...