பட்டலந்தை அறிக்கையின் குற்றவாளிகளுக்குத் தண்டனை நிச்சயம் – நளிந்த உறுதி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பட்டலந்தை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் உரையாற்றுவதற்கு மிகவும் தாமதமாகிவிட்டதாகவும், என்ன நடந்தாலும் இந்த அறிக்கை தொடர்பில் சட்ட நடவடிக்கை நிச்சயம் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
வாக்குறுதியளித்தபடி அரசாங்கம் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்ததாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதியும் மே மாதமும் இந்த அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஒரு குழுவை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், அறிக்கையைச் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
விவாதத்தை நடத்துவதற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி குழுவினர் கருத்து தெரிவித்தனர்.
எனினும் யார் என்ன சொன்னாலும் நாடாளுமன்றத்தில் இந்த அறிக்கை தொடர்பில் இடம்பெறவுள்ள விவாதத்தில் எந்தவித மாற்றமும் இல்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டில் ஜனநாயகம் மற்றும் நீதிக்காக விவாதத்தை நடத்துவதாகவும், அறிக்கையின் உண்மைத் தன்மைகள் தொடர்பில் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பட்டலந்தை சம்பவம் தொடர்பில் முழுவதும் அறிந்தவர் முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்க என்றும், அல் ஜசீராவின் சமீபத்திய நேர்காணலில் கேள்வியெழுப்பும் வரை அவர் அதைப் பற்றி ஒருபோதும் பேசவில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று இல்லை, கடந்த 35 ஆண்டுகளாக ரணில் இதைப் பற்றிப் பேசியிருக்கலாம்.
அல் ஜசீரா பேசும் வரை அவர் எதுவும் சொல்லவில்லை.
ரணில் இப்போது மிகவும் காலம் தாழ்த்திவிட்டார் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் குறிப்பிட்டார்.