Main Menu

ஜனாதிபதி மற்றும் இந்திய இராஜ தந்திரிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை ஆரம்பம்

இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வருகை தந்த இந்திய நிதி மற்றும் நிறுவன அலுவல்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், மற்றும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் ஆகியோர் ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இந்தியா – இலங்கை பொருளாதார ஒத்துழைப்புக்களைப் பலப்படுத்திக்கொள்ளல் மற்றும் இருநாடுகளுக்கும் இடையிலான முதலீட்டு வாய்ப்புக்களை விரிவுபடுத்திக் கொள்வது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் இந்திய நிதி, நிறுவன அலுவல்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அதேநேரம், இந்தியச் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அதிகளவில் அழைத்து வருவது மற்றும் இலங்கையின் விவசாய நவீனமயமாக்கல், டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
ஜனாதிபதி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு சிநேகப்பூர்வமாக இடம்பெற்றதோடு, இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு இந்தியாவின் மிகப்பெரிய சந்தையைப் பயன்படுத்திக்கொள்வது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், இந்நாட்டின் சுற்றுலா, முதலீடு மற்றும் வலுசக்தி துறைகளில் ஒத்துழைப்பு வழங்குவதற்கும் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இதன்போது இணக்கம் தெரிவித்தார்.
மீன்பிடித்துறை மற்றும் தேசிய ஒற்றுமை மேம்பாடு உள்ளிட்ட இருநாடுகளுக்கும் அன்னியோன்னியமான விடயங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
அதனையடுத்து இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் (Shri Ajith Doval) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்து வலயத்தின் பாதுகாப்பு குறித்துக் கலந்துரையாடினார்.
பகிரவும்...