Main Menu

அரச ஊழியர்களின் சம்பளத்தில் 50 சதம் கூட உயர்த்த முடியாது

”அரச ஊழியர்களின் சம்பளத்தில்  50 சதம் கூட உயர்த்த முடியாது” என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கெஸ்பேவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது  குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் ஏற்பட்ட பாரிய பொருளாதார வீழ்ச்சியினால் நாடு பல நெருக்கடிகளை  சந்தித்தது.  தற்போதுதான் படிப்படியாக அந்த சூழல் மாறி  நல்லதொரு நிலை உருவாகி வருகின்றது.

எனினும் கடன் மறுசீரமைப்பு முடியும் வரை நாடு மீண்டும் கடன் பெற முடியாது. எனவே  யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்தப் பொருளாதாரப் பிரச்சினைக்கு சரியான தீர்வைக் காண வேண்டும் .

மேலும் கடந்த ஆண்டு மொத்த வரி வருமானத்தில் 72% அரச சேவைக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்காக செலவிடப்பட்டது.

சமுர்த்தி மற்றும் ஏனைய மானியங்களுக்கு ஐநூறு பில்லியன் செலவிடப்பட்ட போது திறைசேரிக்கு கிடைத்த வரி வருமானத்தில் ஒரு சதம் கூட மீதம் இருக்கவில்லை.

இவ்வாறான நிலையில் அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை எவ்வாறு அதிகரிப்பது? இவ்வாறுஅமைச்சர் பந்துல குணவர்தன  கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்நிலையில், அரச ஊழியர்களுக்கு முறையான சம்பள அதிகரிப்பு வரவு செலவுத் திட்டத்தில் உள்வாங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.