Main Menu

ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு பணங்களை பயன்படுத்த தடை: மீறினால் சட்ட நடவடிக்கை!

ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு பணங்களை பயன்படுத்த, தலிபான் அரசாங்கம் தடை விதித்துள்ளது.

பொருளாதார நிலைமையையும், தேசிய நலன்களையும் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தலிபான் அமைப்பு கூறியுள்ளது.

இதுகுறித்து தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிகுல்லா முஜாகித் கூறுகையில், ‘அனைத்து குடிமக்களும், கடைக்காரர்களும், வியாபாரிகளும், தொழில் அதிபர்களும், பொதுமக்களும் இனி எல்லா பரிமாற்றங்களையும் ஆப்கானியைக்கொண்டு (ஆப்கானிஸ்தான் பணம்) மட்டுமே செய்ய வேண்டும்.

வெளிநாட்டு பணங்களை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. யாரேனும் மீறி பயன்படுத்தினால் சட்டப்பூர்வமான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியது வரும்’ என கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசமாகியதையடுத்து பல்லாயிரம் கோடி மதிப்பிலான ஆப்கானிஸ்தானின் வெளிநாட்டு சொத்துகளை அமெரிக்க ரிசர்வ் வங்கியும், ஐரோப்பிய மத்திய வங்கிகளும் முடக்கி உள்ளன.

சர்வதேச நிதியமும், உலக வங்கியும் கூட ஆப்கானிஸ்தானுக்கு எந்த நிதி உதவியும் செய்ய முன்வரவில்லை.

இதனால், ஆப்கானிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகின்ற நிலையில், தலிபான்களின் இந்த புதிய அறிவிப்பு நெருக்கடியை ஏற்படுத்தவுள்ளது.

பகிரவும்...