ஜனாதிபதி மியன்மார் பாணியிலான இராணுவ ஆட்சிக்கு முயல்கின்றார் – சட்டத்தரணிகள் சாடல்
ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ மியன்மார் பாணியிலான இராணுவ ஆட்சிக்கு முயல்கின்றார் என சட்டத்தரணி சிரால் லக்திலக தெரிவித்துள்ளார்.
தேசிய நூலகம் மற்றும் ஆவண சேவைகள் வாரியத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய சட்டத்தரணி சிரால் லக்திலக, ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ தேர்தலில் வெற்றி பெற்றால் சர்வாதிகார ஆட்சி ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டபோதிலும் மக்கள் அவருக்கு வாக்களித்தார்கள் என தெரிவித்துள்ளார்.
அரசியல் பழிவாங்கல் குறித்த குழு நாட்டின் சட்டங்களுக்கு அப்பால் உருவாக்கப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ள அவர், அரசாங்கம் தனது அரசியல் நிகழ்ச்சி நிரலிற்காக இந்த ஆணைக்குழுவின் அறிக்கையைப் பயன்படுத்தினால் மோசமான விளைவுகள் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசியல் பழிவாங்கல் குறித்த ஆணைக்குழு நாட்டின் நீதித்துறையின் அடிப்படைக்கே அச்சுறுத்தலாக காணப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்டங்களை ஜனாதிபதி துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்றும் ஜனநாயக வழியிலான ஆட்சி முறையைப் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.